Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
”பொதுவாக யாரிடமும் பெரிதாக பேசவும் பழகவும் யோசிக்கும் டைப்பில் இருக்கும் மிதுனை கட்சியில் கொண்டுவந்து, அவருக்கு முக்கிய பதவி கொடுப்பது என்பது மிச்சமிருக்கும் அதிமுகவையும் அழிக்கும் முயற்சி”

சீட்டுக் கட்டு சரிவது மாதிரி சரிந்து வருகிறது அதிமுக என்ற மாபெரும் திராவிட இயக்கம். அதற்கு ஒரே காரணம் என தொண்டர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் கைக்காட்டப்படும் நபர் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கற்பூரம் கரைவது மாதிரி கரையும் அதிமுக
ஏற்கனவே நான்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த நிலையில், கட்சியின் முக்கிய முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ பதவியை உதறிதள்ளிவிட்டு, கட்சியை விட்டே விலகியிருக்கிறார். இப்படி கற்பூரம் கரைவதுபோல கட்சிக் கரைந்துகொண்டிருக்கையில், ஹாயாக மிக்ஷர் சாப்பிட்டுக்கொண்டு, தன் மகன் மிதுனை கட்சியின் முக்கிய பொறுப்புக்கு கொண்டுவர திட்டம் தீட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்பதும் சீனியர்களின் கோபத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.
தன்னுடைய தொகுதியை தாண்டி கட்சிக்காக பல்வேறு வகையில் உழைத்த விராலிமலை விஜயபாஸ்கரையாவது தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதையும் அவர் செய்யாதது நிர்வாகிகளை உஷ்ணமாக்கியிருக்கிறது. இன்னும் பல எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக, திமுக என சென்று இணைய பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அறிந்தும், கட்சியும் சின்னமும் தன் பக்கம் இருக்கிறது என்ற மிதப்பில் அதிமுகவை தன் குடும்ப கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
சொந்த காசை போட்டு ஐடி விங் நடத்திய சத்யன் மீது பழி
அதே நேரத்தில் அதிமுக கள செயல்பாடுகளில் பெரிதாக தீவிரம் காட்டாதபோதும், தேர்தல் பிரச்சாரங்களை சொதப்பியபோதும், சமூக வலைதளங்களில் அதிமுகவை அசாத்திய சக்தியாக காட்ட எல்லா முயற்சிகளைகளையும் மேற்கொண்டவர் அந்த கட்சியின் ஐடி விங் அணிச் செயலாளர் ராஜ்சத்யன். தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அணியின் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் அதிமுக நிதி வழங்காத நிலையில், தன்னுடைய சொந்த பணத்தை போட்டு அதையெல்லாம் செய்தவர் அவர். ஆனால், கட்சித் தோல்விக்கு யார் மீதெல்லாம் பழிபோடலாம் என்ற பட்டியலை எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருந்த நிலையில், அவருக்கு பிடிக்காதவர்கள் ராஜ்சத்யன் பெயரையும் அதில் எழுதிவிட, எங்கே தப்பு நடந்தது, எப்படி நடந்தது என்பதையெல்லாம் விசாரிக்காமல், குறைகளின் கூடாரமாக விளங்குபவர்களின் பேச்சுக்களை கேட்டு, சத்யன் பதவியை பறிக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார்கள் என்கிறார்கள் ஐடி விங் நிர்வாகிகள். இதில் அதிருப்தியடைந்த சத்யன், மிதுனை கட்சிக்குள் கொண்டுவரும் பேச்சுகள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது தவறுதான் என்று பதிவு செய்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
அதிமுக ஐடி விங் செயலாளர் மிதுன் ?
ராஜ்சத்தியனிடமிருந்து ஐ.டி விங் பதவியை பறித்து, தன்னுடைய மகன் மிதுனுக்கு அந்த பதவியை கொடுக்க முதல்கட்டமாக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும், அதன்பின்னர் படிபடியாக கட்சியின் இளைஞரணியின் செயலாளர் ஆக்கலாம் என்றும் அவர் முடிவு எடுத்து அதற்கேற்றவாறு செயலாற்றி வருவதாகவும் கூறபடுகிறது. மிதுனும் சத்யனும் இணைந்தே பல வியூகங்களை வகுத்ததாக கூறப்பட்ட நிலையில், பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கமென தட
மிதுன் எப்படி?
இயல்பிலேயே அடுத்தவருடன் அதிகமாக பழக முயற்சிக்காத ரிசர்வ்டு டைப்பான மிதுனுக்கு எப்படி கட்சியின் முக்கிய பதவியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அதிமுக வியூக வகுப்பிற்கு பிரம்மாணியா என்ற நிறுவனத்தை கொண்டுவந்து அதனை பின்னாலிருந்து இயக்கியவரே மிதுதான். அப்படி அவர்கள் வகுத்த தவறான வியூகங்கள், கள நிலவரத்தை அறியாத முடிவுகள்தான் அதிமுகவின் படுதோல்விக்கு காரணம். அப்படியிருக்கையில், மிதுனைதான் அவர் கட்சி பக்கமே தலைகாட்டக் கூடாது என்று கண்டிக்க வேண்டும். மாறாக அவருக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க முயற்சிப்பது வானத்தை வில்லாக வளைக்க நினைக்கும் வீண் முயற்சி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தான் – என்ற அகம்பாவம் – கொதிப்பில் சீனியர்கள்
எடப்பாடியின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளாலும் தான் என்ற அகம்பாவத்தாலும்தான் கட்சி இன்று சின்னாபின்னமாக சிதறி கிடக்கிறது என்றும் அதனை சரி செய்ய முயற்சிக்காமல் தன் மகனை கட்சிக்கு கொண்டுவரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருப்பதும் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட பேரியக்கம் போன பக்கம் தெரியாமல் அழிந்துவிடும் என்பதும் ரத்தத்தின் ரத்தங்களின் கவலையாக இருக்கிறது.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















