Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
Vijay in AIADMK alliance : இன்றோ நாளையோ தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் விஜய் இணைவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்காமல் இபிஎஸ் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்றோ நாளையோ அறிவிக்கப்படவுள்ளது. எனவே இந்த 5 மாநில தேர்தல் தேதியை எதிர்பார்த்து நாடே காத்துக்கொண்டுள்ளது. அதே நேரம் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் விரைவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 21 கட்சிகளை கொண்ட பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக தொகுதி பங்கீட்டை முடித்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுககவிற்கு 4 தொகுதிகளும், முஸ்லிம் லீக், மமக, கொங்கு கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கூடுதல் தொகுதி வேண்டும்
தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும் பட்சத்தில் எங்களுக்கும் கூடுதல் தொகுதிகளை தர வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்யும் பணியில் திமுக தலைமை இறங்கியுள்ளது. அதேநேரம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியை முதல் ஆளாக தொடங்கிய கட்சி அதிமுக, கடந்த ஆண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அடுத்தாக பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்தது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தது 40 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. அதில் இருந்து அமமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
மேலும் பாமக, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. ஆனால் தற்போது வரை எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கு பின்னனியில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை மற்றும் திருச்சியில் இரண்டு முறை அதிமுக- பாஜக கூட்டணி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு இறுதி செய்யாத நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தவெக இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இணைய தவெகவிற்கு அழைப்பு விடுத்த நிலையில் இதனை விஜய் மறுத்திருந்தார்.
என்ன சொல்லப்போகிறார் விஜய்.?
தற்போது தவெகவிற்கு அடி மேல் அடி விழுவதால் நெருக்கடியான நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி விஜய்யை அதிமுக- பாஜக கூட்டணிக்கு இழுக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. எனவே விஜய்யின் முடிவிற்காக தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் எடப்பாடி பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு விஜய் வரும்பட்சத்தில் குறைந்தது 40 முதல் 50 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அதிமுக 150 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 15 தொகுதிகளிலும், அமமுக 8 தொகுதிகளும் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய தற்போது வரை தவெக தலைவர் விஜய் ஒத்துக்கொள்ளவில்லையெனவும், தனி அணியாகவே களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அரசியலில் தினந்தோறும் புதிய புதிய மாற்றங்களை அரங்கேறி வரும் நிலையில், எந்த மாற்றமும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். எனவே அரசியலில் இதெல்லாம் சகஜம்பபா என்ற நிலை தான் தற்போது அரசியல் கள நிலவரமாக உள்ளது.























