Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
”ஒரு லெட்டர் கொடுத்து என்னை ஒரு நொடியில் அமைச்சர் பொறுப்பில் இருந்து எடுத்துவிட முடியும். ஆனால், திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீங்கள் விலக வைக்க முடியாது”

திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை நீக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், சாகும் வரை நானே பொதுச்செயலாளராக இருப்பேன் என அவர் சூளுரை செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
துரைமுருகன் மீது முதல்வர் அதிருப்தி
திமுகவின் மூத்தவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு பேராசிரியர் அன்பழகன் மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அவர் பொதுச்செயலாளர் ஆன சில நாட்களிலேயே அவருடைய செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதனால், திமுக தலைமை அவர் மீது அதிருப்தி அடைய தொடங்கியது. 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையான பொதுப்பணித் துறையை துரைமுருகனிடம் கொடுக்காமல், அதனை இரண்டாக உடைத்து நீர்வளத்துறையையும் கூடுதலாக கனிம வளத்துறையையும் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை துரைமுருகனை கடும் அப்செட் ஆக்கியது. இதனால், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கட்சியில் தன்னுடைய செயல்பாடுகளை வேறு மாதிரி துரைமுருகன் மாற்றிக்கொண்டதாகவும் இதனால் திமுக தலைமை மிகுந்த அதிருப்தி அடைந்ததாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துறையில் தொடர்ந்த, தொடர் புகார்கள்
அதே மாதிரி, துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்ட நீர்வளம் மற்றும் கனிம வளத்துறையிலும் ஏகப்பட்ட புகார்கள். குறிப்பாக மணல் வியாபாரிகள் கரிகாலன், ராமசந்திரன் உள்ளிட்டோருடன் துரைமுருகன் தரப்பு அதிக நெருக்கம் காட்டியதால், அமலாக்கத்துறை ரெய்டு வரைக்கும் சென்று, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டு திமுக ஆட்சிக்கு கடும் நெருக்கடி தரப்பட்டது. இதனால், துரைமுருகன் மீது கோபம் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடம் இருந்த கனிம வளத்துறையை எதைப் பற்றியும் யோசிக்காமல் பறித்து அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ங்க – கேட்ட நபர்
இந்நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாகவும் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை இப்போதே துரிதப்படுத்த தோதாகவும், நிர்வாகிகள் நியமனம், நீக்கம் தொடர்பாக விரைவான அறிவிப்புக்கு ஏற்றார்போலவும் தலைமை செயல்பட பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுகவின் முக்கிய முகம் ஒருவர் அவரிடம் பேசியுள்ளார். அவர் பேசும்போது, ’அரசியல் அனுபவம் மிக்க நீங்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு உதவியாக இருப்பீர்கள் என்று நினைத்து பொதுச்செயலாளர், அமைச்சர் என்ற பொறுப்புகளை கொடுத்தால், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்’, இப்போது திமுகவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருப்பதால், பொதுச்செயலாளர் பதவியை நீங்களே தாமாக வந்து ராஜினமா செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆவேசமான துரைமுருகன் – உயிருள்ளவரை நான் – தான் பொதுச்செயலாளர்’
ஆனால், இதனை கேட்டு ஆவேசமடைந்த துரைமுருகன், ’ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் கொடுத்து ஒரு நொடியில் என்னை அமைச்சர் பொறுப்பில் இருந்து எடுத்துவிட முடியும். ஆனால், திமுகவின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து என்னை அப்படி யாரும் நீக்கிவிட முடியாது’ என்று கோபமாக பேசியுள்ளார்.
அதோடு, ‘என்னை அமைச்சர் பதவியில் இருந்துக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், என்னை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். எப்படி சாகும் வரை கலைஞர் திமுகவின் தலைவராக இருந்தாரோ, பொதுச்செயலாளராக பேராசிரியர் அன்பழகன் இருந்தாரோ, அதே மாதிரி என் உயிர் உள்ளவரை திமுகவின் பொதுச்செயலாளராகவே இருப்பேன்’ என உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
தொடரும் அதிருப்தி – என்ன செய்யப் போகிறது தலைமை ?
துரைமுருகனிடம் பேசிய திமுகவின் முக்கிய முகம், அதற்கு மேல் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்ட நிலையில், அவர் தொடர்ந்து பொதுச்செயலாளராக தொடர்ந்தால் மீண்டும் தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுப்பார் என்பதை உணர்ந்து, அவரை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன





















