"பைத்தியத்துக்கு பதில் சொல்ல முடியாது" சீமானை அட்டாக் செய்த கி.வீரமணி!
பகுத்தறிவு உள்ளபவர்களுக்கே பதில் சொல்ல முடியும். பைத்தியத்திற்கு பதில் சொல்ல முடியாது என்று சீமானை மறைமுகமாக சாடியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்துக்களுக்கு திராவிட கட்சிகளும், பெரியார் ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடலூரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.
பைத்தியத்திற்கு பதில் சொல்ல முடியாது:
அப்போது, அவர் பேசியதாவது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெரியார் பற்றி மிகுந்த தன்னடக்கத்தோடு சொன்னார். நாம் எப்போதும் பகுத்தறிவு உள்ளபவர்களுக்கு பதில் சொல்பவர்கள். மற்றவர்களுக்கு பதில் சொல்வது இல்லை என்றார். அதுமட்டுமில்லாமல், பைத்தியம் பிடிக்காதவர்களுக்குத்தான் நாம் பேச வேண்டும். பைத்தியம் பிடித்தவர்களுக்கு எல்லாம் தேவைப்படுவது பதில் அல்ல. பைத்தியம் பிடித்தவர்களுக்கு வேண்டியது சிகிச்சையே.
ஒருவர் என்னிடம் குறிப்பிட்டவர் பெயரைச் சொல்லி இப்படி சொல்கிறாரே என்றார். இன்னொருவர் பெயரை குறிப்பிட்டு அவர் அவரை ஆதரிக்கிறாரே? என்றார். ஒரே ஒரு பைத்தியம்தான் இருக்கனும்னு அவசியமா? பைத்தியக்கார படை. நிதி கொடுக்க வந்தவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லக்கூடிய சூழல் வந்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நாம் தமிழர் - பெரியார் ஆதரவாளர்கள் மோதல்:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெரியார் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓரிரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அவரது வீட்டை பெரியார் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது சீமானுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் கையில் உருட்டுக்கட்டையுடன் உலா வந்தனர்.
தமிழ் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் செய்து வரும் சீமான், பெரியாரையும், திராவிட கொள்கைகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், நாம் தமிழர் கட்சியினருக்கும் பெரியார் ஆதரவாளர்களுக்கும் இடையே இணையத்தில் மிகப்பெரிய அளவு வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
இந்த சூழலில், பெரியார் குறித்து கருத்து தெரிவித்த சீமானை பைத்தியம் என்று தி.க. தலைவர் வீரமணி சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















