காங்கிரஸ் தனித்து போட்டி? திமுக உடனான கூட்டணி முறிவு: ராகுல்காந்திக்கு நிர்வாகிகள் கடிதம்!
புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் 20 தொகுதிகள் கிடைக்காவிட்டால், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுல்காந்திக்கு கடிதம் .

புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் 20 தொகுதிகள் கிடைக்காவிட்டால், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த திமுக., கூட்டத்தில் மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா, வரும் தேர்தலில் தி.மு.க., 20 தொகுதிகளில் போட்டியிடும். மீதி 10 தொகுதிகள் தான் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என பேசி இருந்தார். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் மாநில செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலம், வரும் 2026ல் சட்டசபை தேர்தலைச் சந்திக்கிறது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாக இருக்கப்போகிறது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 30 தொகுதிகளில் 29 தொகுதிகளில் பாஜவை விட காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
எனவே, வரும் 2026 சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டிற்காக, புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளரை நியமிக்க வேண்டும். புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்புவது மொத்தமுள்ள 30 தொகுதிகளில், குறைந்த பட்சம் 20 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். மீதமுள்ள இடங்களை கூட்டணிக் கட்சிகளான திமுக., விசிக., மற்றும் கம்யூ., கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணியில் 20 தொகுதிகளை பெற முடியாவிட்டால், 30 தொகுதிகளிலும் நாம் தனித்து போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால், 18 தொகுதிகளில் வெல்லும் என உறுதியாக நம்புகிறோம். இதனால், கட்சியை மேலும் பலப்படுத்த முடியும்.
கூட்டணி கட்சியான திமுக புதுச்சேரி தலைமை, காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அமைப்பது கடினம். மக்கள் எப்போதும் காங்கிரஸ் மீது நம்பிக்கையும், ஆதரவும் கொண்டுள்ளனர். புதுச்சேரி அரசியல் சூழல், தமிழகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மூத்த தலைவரின் தவறான முடிவால், காங்கிரஸ் தொகுதிகளை திமுக கூட்டணியிடம் இழந்தோம். அந்தத் தேர்தலில் தி.மு.க., 6 இடங்களை வென்றது, காங்கிரஸ்க்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
சமீபத்திய நாட்களில் திமுக., காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறது. அதன் மாநில அமைப்பாளர் காங்கிரஸ் ஓடாத வண்டியில் அதில் பயணிக்க விரும்பவில்லை என கூறினார். ஆகையால், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பியுள்ள கடிதம், இண்டியா கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கூறுகையில், திமுக., காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் இதே சூழல் நிலவினால் காங்கிரஸ் தனித்து களம் காணும், இது ஒன்றும் தமிழ்நாடு இல்லை, புதுச்சேரியில் ஒன்று காங்கிரஸ் மற்றொன்று என் ஆர் காங்கிரஸ் இரண்டு பேருக்கும் தான் போட்டி, மற்ற கட்சிகளுக்கு இங்கு இடமில்லை, அதனை மக்கள் அனுமதிக்க மாட்டர்கள். பாஜக எவள்ளவு தில்லுமுல்லு வேலைகளை பார்க்கிறது, அனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.





















