தளபதியை விடக்கூடாது.. உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆகனும்.! ஸ்டாலினை நெருக்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக- காங்கிரஸ் தொடரும் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ளலாம் என திட்டமிட்ட திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது காங்கிரஸ், அந்த வகையில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என திமுகவிற்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. இதற்கு ஏற்க தவெக கட்சியோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையையும் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் மேற்கொண்டனர். மேலும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் ஆட்சியில் பங்கு தொடர்பாகவும் வெளிப்படையாக சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தனர்.
3ஆயிரம் ஓட்டு தான் காங்கிரஸ்க்கு இருக்கு
இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என கேள்வி எழுந்திருந்தது. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து ஆட்சியில் பங்கு தொடர்பாக தேர்தல் முடிவிற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் சைலண்ட் மோடிற்கு சென்ற நிலையில், மதுரையில் நடைபெற்ற திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருந்தார். மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை எம்பியாகிவிட்டார்கள்.
அவர்கள் இன்று ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிக்கு 3000 முதல் 4000 ஓட்டுதான் இருக்கிறது. அந்த கட்சியில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லையெனவும் விமர்சித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தளபதி பேச்சு கண்டிக்கதக்கது
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.
தளபதி மீது நடவடிக்கை எடுங்க..
காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்வதாக செல்வப்பெருந்தகை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.























