Cong Vs Vck: மீண்டும் கூட்டணி மோதல்... விசிக எம்எல்ஏக்கு எதிராக சீறிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை- நடந்தது என்ன.?
உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி.?
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தை விட உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்தது. இதற்கு அப்போது காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்தார். எங்களது உட்கட்சி பிரச்சனையில் தலையிடாதீங்க எனவும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தகளை கட்சி எம்எல்ஏக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விசிக எம்எல்ஏக்கு கண்டனம்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி ஐடி விங் தலைவர் நபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்திருந்தார். அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளாகும்.

உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு தலைமையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
எஸ்.எஸ். பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில், உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தைப் பேண வேண்டிய இத்தகைய காலகட்டத்தில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் தவறான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை வெளியிடுவது, கூட்டணியின் ஒற்றுமைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானதாகும்.
உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பதா.?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் கூறாத கருத்தை கூறியதாகப் பரப்பி, அதனை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய செய்திகளை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக நபில் அகமது அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.























