TN BJP Leader Nainar?: முடிந்த ரேஸ்.. நயினார் நாகேந்திரன் ரூட் க்ளியர்.. தலைவராக அடுத்த வாரம் அறிவிப்பு.?
பாஜக தமிழ்நாடு தலைவருக்கான ரேஸ் முடிந்து விட்டதாகவும், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராவதற்கான சூழல்களே நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் யார் என்ற கேள்வி சில வாரங்களாகவே தொடர்ந்து வந்த நிலையில், அதற்கான போட்டியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், நேற்று அண்ணாமலை அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் ரூட் க்ளியராகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நீடித்து வந்த போட்டி
2026-ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி கூட்டணி அமைய வேண்டுமென்றால், அதற்கு அண்ணாமலை சரிப்பட்டு வர மாட்டார் என்பதால், தலைவரை மாற்ற பாஜக மேலிடம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, பாஜக தமிழ்நாடு தலைவருக்கான ரேஸ் தொடங்கியது.
அந்த ரேஸில், பாஜக மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால், தலைவராவதற்கு அதிகமான வாய்ப்பு முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கே உள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில், டெல்டா பகுதிகளில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கலாம் என்று பாஜக மேலிடம் கருதியது. அதற்கு ஏற்றார்போல், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான நயினார் நாகேந்திரன், அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பதால், அவரை தலைவராக்கினால் கூட்டணி அமைப்பதற்கு சாதகமான சூழல் ஏற்படும் என்ற கோணத்திலும் பாஜக மேலிடம் யோசிக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை, அவருக்கு நெருக்கமாக உள்ள கருப்பு முருகானந்தத்தையும் உடன் அழத்துச் சென்று, மேலிடத்தில் அவர் பெயரை பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. நயினார் நாகேந்திரனைப் போல் கருப்பு முருகானந்தமும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், டெல்டா பகுதியில் வாக்குகளை பெறும் வகையில், அவர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, கருப்பு முருகானந்தம் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், அதனால் அவரை மாநிலத் தலைவராக நியமித்தால் சரியாக வருமா என்ற கேள்வியும் பாஜக தலைமையிடம் எழுந்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ரேஸ் முடிந்தது.. நயினாருக்கு சாதகமாக மாறிய சூழல்
இப்படிப்பட்ட சூழலில், டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை, அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டெல்லியிலிருந்து திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். மேலும், தலைவர் நியமனத்தில் தான் யாரையும் கைகாட்டவில்லை என்றும் கூறினார். அதோடு, பாஜகவில் தலைவருக்காக யாரும் போட்டி போடுவதில்லை, ஒருமனதாக அனைவரும் சேர்ந்துதான் தேர்ந்தெடுப்பது வழக்கம் என்பதையும் கூறனார்.
இதனால், தற்போது பாஜகவில் மாநிலத் தலைவருக்கான ரேஸ் முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும், கருப்பு முருகானந்தத்தை அண்ணாமலை பரிந்துரை செய்யவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது. இதனால், தற்போது நயினார் நாகேந்திரனின் ரூட் க்ளியராகிவிட்டது.
முக்குலத்தோர் சமுதாயம், தென் மாவட்டங்களில் செல்வாக்கு, அதிமுகவுடன் இணக்கம் என, அனைத்துமே நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாகவே உள்ளது. அதனால், அவரையே தலைவராக பாஜக மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் பாஜக தலைவர்கள் கூட்டததில், தமிழ்நாடு தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அன்றே அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியானது. இதனிடையே, வரும் 7,8 தேதிகளில் தமிழ்நாடு வர இருந்த பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, 11-ம் தேதிதான் வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனால், 9-ம் தேதி நடைபெறும் மேலிட கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை, தமிழ்நாடு வரும்போது கிஷன் ரெட்டி அறிவிப்பார் எனத் தெரிகிறது. எப்படியோ, ரூட் க்ளியரானதால், நயினார் நாகேந்திரனே தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 11-ம் தேதி வரை காத்திருப்போம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

