![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamilnadu Election 2024: 40 தொகுதிகளிலும் தோல்வி.. ரூட்டை மாற்றிய இபிஎஸ்!
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
![Tamilnadu Election 2024: 40 தொகுதிகளிலும் தோல்வி.. ரூட்டை மாற்றிய இபிஎஸ்! AIADMK general secretary Edappadi Palaniswami has said after the defeat parliamentary elections win the 2026 assembly elections Tamilnadu Election 2024: 40 தொகுதிகளிலும் தோல்வி.. ரூட்டை மாற்றிய இபிஎஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/66519bdd64b7576c492d3b8c26079e5f1717510663677571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்த அதிமுக:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த இரண்டாவது தேர்தல் இது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதன்படி, 11 தொகுதிகளில் அதிமுக, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அறிக்கையை வெளியிட்ட இபிஎஸ்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி 73 இடங்களைப் பெற்று நாம் பார் என்பதை உலகுக்குக் காட்டினோம்.
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொறுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன கைமாறு செய்யப்போகிறேன்:
தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். 'உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.' என்று கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
"எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா-நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"
என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்” என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)