நாகப்பட்டினம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்க்கு செம்ம நியூஸ்... ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் முக்கிய அறிவிப்பு!
2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: இந்திய அரசால் ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம விருதுகள்' (பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண்) அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் சூழலில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார், செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள்
பத்ம விருதுகள் என்பது நாட்டின் பல்வேறு துறைகளில் தலைசிறந்த விளங்கி, தனிநபர் சாதனைகள் புரிந்த தகுதியான மனிதர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும். அந்த வகையில்,
கலை & பண்பாடு: கலை, இலக்கியம், இசை, ஓவியம் (Painting), சிற்பக்கலை, புகைப்படக்கலை (Photography) மற்றும் சினிமா ஆகிய துறைகளில் தேசிய அளவில் திறமையை நிரூபித்தவர்கள்.
பொதுநலச் சேவை: சாதி, மத எல்லைகளைக் கடந்து மக்கள் நலனுக்காகப் பணியாற்றிய தன்னார்வலர்கள், பொதுச் சேவை, சட்டம், பொது வாழ்க்கை மற்றும் அரசியலில் முத்திரை பதித்தவர்கள்.
அறிவியல் & தொழில் நுட்பம்: அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி அறிவியல் (Nuclear Science) மற்றும் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள்.
வணிகம் & பொருளாதாரம்: தேசிய வணிகம், தொழிற்துறை, வங்கித்துறை, பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியைக் கூட்டிய சாதனைக் காரர்கள்.
மருத்துவத்துறை: மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, அலோபதி மற்றும் இயற்கை வைத்திய முறைகளில் அரிய சாதனைகள் புரிந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.
கல்வி & பத்திரிகையியல்: கல்வித் துறை வளர்ச்சி, கற்பித்தல், பத்திரிகையியல், நாவல், கவிதை, பாடல்கள் எழுதுதல் மற்றும் கல்வியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டவர்கள்.
நிர்வாகம்: அரசு நிர்வாகம், மேலாண்மை மற்றும் அரசாங்கத்தை மேம்படுத்தும் சீரிய பணிகளைச் செய்த அதிகாரிகள்.
சமூக நலம் & மனித உரிமை: இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல், மனித உரிமைகளை நிலைநாட்டுதல், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு போன்ற இயற்கை சார்ந்த சேவைகளில் ஈடுபட்டவர்கள்.
இத்தகைய பல்வேறு பிரிவுகளில் சாதனைகள் புரிந்த பெருமக்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்கு முக்கிய வாய்ப்பு
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மலையேற்ற வீரர்கள், விளையாட்டுத் துறையை மேம்படுத்திய பயிற்சியாளர்கள், விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திய அமைப்பாளர்கள் ஆகியோர் இந்த உயரிய விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய விளையாட்டுச் சாதனையாளர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதமான https://awards.gov.in என்ற முகவரியின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் மற்றும் அது தொடர்பான முழுமையான விவரங்களைப் பெற முடியும்.
முக்கியக் குறிப்பு
தகுதியான நபர்கள் தங்களது சான்றிதழ்கள் மற்றும் சாதனைக் குறிப்புகளுடன் மேற்கண்ட இணையதள முகவரியில் வருகின்ற 31.07.2026-க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























