மாங்கல்ய தாரணம் & ஊஞ்சல் உற்சவம்: திருக்கடையூர் அபிராமி அம்பாள் திருக்கல்யாண அபூர்வ காட்சியை கண்டு மெய்சிலிர்த்துப் போன பக்தர்கள்..!
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமான நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ள, தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த இந்த வைபவம், திருக்கடையூர் நகரையே விழாக்கோலம் பூணச் செய்தது.
அட்டவீரட்டத் தலத்தின் பெருமை
சைவ சமயக் குறவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் திருக்கடையூர் மிகவும் முக்கியமானது. மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான் எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது என்பதால், இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. எமனை வென்ற தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்திக்காக சஷ்டியப்த பூர்த்தி (60), பீமரத சாந்தி (70), சதாபிஷேகம் (80) உள்ளிட்ட விசேஷ வழிபாடுகளைச் செய்ய உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சித்திரை பெருவிழா தொடக்கம்
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 14 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வருகின்றன.
வசந்த மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம்
விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு மணமேடை போல் காட்சியளித்தது.
மாலை வேளையில், சுவாமியும் அம்பாளும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து திருமணக் கோலத்தில் வசந்த மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மணமேடையில் எழுந்தருளினர். பின்னர், தருமபுரம் ஆதீன முறைப்படி சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. வேதியர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேத மந்திரங்களை முழங்க, யாகசாலை ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.
தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவினர்களாகப் பாவிக்கப்பட்ட சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் விண்ணதிர, அர்ச்சகர்கள் மாங்கல்ய தாரணம் செய்ய, ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது.
ஊஞ்சல் சேவையும் பக்தர்களின் வழிபாடும்
திருக்கல்யாணம் முடிந்த பின், மணக்கோலத்தில் இருந்த சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." என்ற கோஷங்களை எழுப்பி, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா
திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்ததும், இரவு வேளையில் மற்றுமொரு சிறப்பம்சமாக சுவாமி மற்றும் அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். பல வண்ண நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மாட வீதிகளில் பவனியாக வந்தன. வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் தங்கள் இல்லங்களின் முன்னால் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். வரும் நாட்களில் தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்வுகளுடன் சித்திரை பெருவிழா நிறைவடைய உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















