அக்காவுக்கு 'டாட்டா' காட்டிய பிஞ்சுக்கரம்.. அடுத்த நொடியே நேர்ந்த கொடூரம்: சீர்காழியை உலுக்கிய சோகம்!
சீர்காழி அருகே அக்காக்களை பள்ளி வேனில் ஏற்றிவிட வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது இரண்டு அக்காக்களை வேனில் ஏற்றிவிடுவதற்காக தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை, அதே பள்ளி வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்த குழந்தையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடது.
விபத்தின் பின்னணி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் ஆனந்தகூத்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அரசி. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், மகிழ்வேலன் (வயது 1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். பாலாஜி - அரசி தம்பதியரின் இரண்டு பெண் குழந்தைகளும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
வழக்கம்போல் இன்று காலை, பள்ளிக்குச் செல்வதற்காக இரண்டு பெண் குழந்தைகளையும் அரசி அழைத்துக்கொண்டு கடுக்காய்மரம் என்ற இடத்திற்கு வந்துள்ளார். அப்போது தனது ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலனையும் இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்துள்ளார். குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளி வேன் கடுக்காய்மரம் பகுதிக்கு வந்து நின்றது.
இதையடுத்து, அரசி தனது இடுப்பில் இருந்த ஆண் குழந்தை மகிழ்வேலனை கீழே இறக்கிவிட்டு, தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பள்ளி வேனுக்குள் பத்திரமாக ஏற்றிவிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிர்
அரசி தனது பெண் பிள்ளைகளை வேனுக்குள் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்த அந்த சில நொடிகளில், கீழே நின்றிருந்த ஒன்றரை வயது குழந்தை மகிழ்வேலன் எதிர்பாராதவிதமாக வேனின் பின்பகுதிக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை கவனிக்காத பள்ளி வேன் ஓட்டுநர் பிரகாஷ், அலட்சியமாக வாகனத்தை முன்னோக்கி இயக்கியுள்ளார்.
பயங்கர விபத்து
வேன் நகரத் தொடங்கியதும், எதிர்பாராதவிதமாக வேனின் பின் சக்கரம் குழந்தை மகிழ்வேலன் மீது ஏறி இறங்கியது. இதில் சக்கரத்தின் அடியில் சிக்கி நசுங்கிய குழந்தை மகிழ்வேலன், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து, தாயின் கண் முன்னாலேயே சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.
தன் கண் முன்னே அக்காக்காகளை வழிஅனுப்ப வந்த தம்பி, அதே பள்ளி வாகனத்தில் சிக்கி பலியானதைக் கண்ட தாய் அரசி கதறித் துடித்தது பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியதால், ஆனந்தகூத்தன் கிராம மக்கள் மற்றும் விபத்து நடந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
வேன் ஓட்டுநர் கைது - வாகனம் பறிமுதல்
இக்கோர விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான குழந்தை மகிழ்வேலனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி வேன் ஓட்டுநர் பிரகாஷை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான பள்ளி வேனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி தாளாளரை கைது செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
பள்ளி வேன் ஓட்டுநரின் அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும், தகுந்த உதவியாளர் (ஆயா) இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உயிரிழந்த குழந்தையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.
குழந்தையின் உடலை வாங்க மறுப்புத் தெரிவித்த உறவினர்கள், சீர்காழி - சிதம்பரம் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்
* விபத்துக்கு காரணமான பள்ளி வேன் ஓட்டுநர் மீது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறிய பள்ளி தாளாளரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
*உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு கிடைக்க வேண்டும்.
*பள்ளி வாகனங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்க தகுதியான உதவியாளர்களை நியமிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து - போலீசாருடன் வாக்குவாதம்
தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சீர்காழி நகர் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சீர்காழி வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி மற்றும் கொள்ளிடம் காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "சட்டம் தன் கடமையைச் செய்யும், ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.
இருப்பினும், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என முழக்கமிட்டதால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
அக்காக்களை பள்ளிக்கு அனுப்ப ஆசையோடு வந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டமும் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தகுந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























