உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு சிறப்பு முகாமில் தகுதியற்ற 12 வாகனங்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், பள்ளி மாணவ-மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமிற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், முன்னிலை வகித்து முகாமினைத் தொடங்கி வைத்தனர்.
அரசு விதிகளின்படி தீவிர வாகன தணிக்கை
இச்சிறப்பு முகாமில் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கூறுகையில்; "தமிழ்நாடு அரசானது, 'தமிழ்நாடு மோட்டார் வாகனம் (பள்ளி வாகனங்கள் ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்) சிறப்பு விதி 2012'-ன் படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் மாவட்ட அளவிலான கூட்டுக்குழுவின் முன்பு ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்திட உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், புதிய கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இன்று இந்த கூட்டாய்வு முகாம் நடத்தப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சோதனையிடப்பட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் பின்வரும் மிக முக்கியமான அம்சங்கள் ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டன;
கட்டமைப்பு வசதிகள்: வாகனத்தின் கூண்டு அமைப்பு, மாணவர்கள் ஏறும் மற்றும் இறங்கும் வழி, கதவுகள், படிக்கட்டுகளின் தரம், ஓட்டுநர் இருக்கை அறை, உள்ளிருக்கும் இருக்கைகள் மற்றும் புத்தக ரேக்குகள்.
பாதுகாப்பு உபகரணங்கள்: அவசரகால வழி (Emergency Exit), வாகனத்தைச் சுற்றி ஒட்டப்பட்டுள்ள பிரதிபலிப்பான்கள் (Reflectors), முதலுதவி பெட்டி மற்றும் அதில் பராமரிக்கப்படும் மருந்துகள், தீ தடுப்பான்கள் (Fire Extinguishers).
தொழில்நுட்பக் கருவிகள்: மணிக்கு 50 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லாதவாறு பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவி (Speed Governor), வாகனத்தின் உள்ளே மற்றும் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் (GPS) கண்காணிப்பு கருவி மற்றும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள டிஸ்ப்ளே மானிட்டர்.
ஆவணங்கள் சரிபார்ப்பு: வாகனத்தின் அனுமதி சீட்டு (Permit), தகுதி சான்று (FC), காப்பீடு சான்று (Insurance), ஓட்டுநர் உரிமம் (Driving License), உதவியாளர் விபரங்கள் மற்றும் புகை சான்று (Pollution Certificate).
நிராகரிப்பும் - ஆட்சியரின் எச்சரிக்கையும்
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய பகுதிகளில் உள்ள 70 பள்ளிகளில் மொத்தம் 425 பள்ளி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில், இன்றைய முகாமில் 360 வாகனங்கள் நேரடியாகக் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் 348 வாகனங்கள் எவ்வித குறைபாடுகளும் இன்றி தகுதியானவையாகக் கருதப்பட்டு, தொடர்ந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி இறக்க அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும், சில தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 12 வாகனங்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டன.
நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறித்து ஆட்சியர் கூறுகையில்,
"குறைபாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்ட 12 பள்ளி வாகனங்களும், அடுத்த 7 நாட்களுக்குள் அனைத்துப் பழுதுகளையும் சரி செய்ய வேண்டும். பின்னர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முன்னிலையில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச்சான்று பெற்ற பின்னரே பொதுச்சாலையில் இயக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏதேனும் வாகனங்கள் இயக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.
விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஓட்டுநர்களுக்கு அறிவுரை
மேலும் ஆட்சியர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். விபத்து என்பது எதிர்பாராமல் நடக்கக்கூடியது என்றாலும், ஓட்டுநர்களின் விழிப்புணர்வால் அதைத் தடுக்க முடியும்.
பள்ளி வாகன ஓட்டுநர்கள் போதிய அளவு இரவு தூக்கம், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது மிகுந்த விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் செயல்முறை விளக்கங்கள்
இக்கூட்டாய்வு முகாமில் வாகன தணிக்கையோடு நின்றுவிடாமல், ஓட்டுநர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.
1.கண் பரிசோதனை முகாம்: வாகன ஆய்விற்கு வந்திருந்த அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும், மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவக் குழுவினரைக் கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
2. தீயணைப்புத் துறை செயல்முறை விளக்கம்: தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மற்றும் அவரது குழுவினர், பள்ளி வாகனங்களிலோ அல்லது பள்ளிகளிலோ திடீரென தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு உடனடியாகக் கட்டுப்படுத்துவது மற்றும் தீயணைப்பு உருளைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
3. 108 ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு: அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வாறு தொடர்புகொள்வது, விபத்து காலங்களில் முதலுதவி வழங்கி உயிர்களை எப்படிக் காப்பது என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான குழுவினர் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
4. தொழிலாளர் நலத்துறை முகாம்: தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கான சிறப்புப் பதிவு முகாமும் அங்கு நடைபெற்றது.
கலந்துகொண்ட முக்கிய அதிகாரிகள்
இந்த பிரம்மாண்ட கூட்டாய்வு முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கீதா, துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் ரமா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், வாகனங்களின் தகுதியை முழுமையாக ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல், மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். இம்முகாம் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி வாகன ஓட்டுநர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















