"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
மயிலாடுதுறை அருகே பாலியல் தொல்லை வழக்கில் போலீஸார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாககூறி விசிக, இடதுசாரிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில், 40 வயது நபர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவகாரத்தில், குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கத் தவறிய பெரம்பூர் காவல்துறையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் அரும்பாக்கம் கடைவீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்ற விசிக மாவட்டத் துணைச் செயலாளர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, 300க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
சாதிய வன்மம் மற்றும் பாலியல் கொடூரம்
படுகை கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நல்லாடை கிராமத்தில் உள்ள ஓர் ஏடிஎம் (ATM) மையம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல், அவரிடம் "ஏன்டா இங்க நிக்கிற? உனக்கு எந்த ஊர்? நீ என்ன ஜாதி?" என்று சாதிய வன்மத்துடன் கேட்டு, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு நில்லாமல், மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டிய அந்தக் கும்பல், அவரை சரமாரியாகக் கையால் தாக்கியதுடன், அவரது சட்டையைக் கிழித்து, மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த நபரைக் கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவுக்கு (ஓரினச்சேர்க்கை) உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நிலையில், அந்த நபர் அந்த கும்பலிடமிருந்து உயிருக்கு பயந்து தப்பி ஓடி வந்துள்ளார்.
போலீசாரின் மேம்போக்கான நடவடிக்கை மற்றும் வைரல் வீடியோ
இக்கொடூரச் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பெரம்பூர் காவல் நிலைய போலீசார் 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய நல்லாடையைச் சேர்ந்த சரண் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட நபரை 8 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்தோ, சாதி ரீதியாக இழிவுபடுத்தியது குறித்தோ பெரம்பூர் காவல்துறையினர் உரிய பிரிவுகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர், காவல்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
விசிக நிர்வாகி கைது: போலீசார் பழிவாங்கும் நடவடிக்கையா?
பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு ஆதரவாக நின்று, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் யோவான் ஸ்டாலின் மீது பெரம்பூர் போலீசார் திடீரென இரண்டு குற்ற வழக்குகளைப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு நபரின் குடும்பத்தாரிடம் யோவான் ஸ்டாலின் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், மற்றொரு நிலம் தொடர்பான வழக்கில் ஏர் உழுத டிராக்டரை சேதப்படுத்தி அதன் உதிரிபாகங்களைத் திருடிச் சென்றதாகவும் புகார்கள் பெறப்பட்டதாகக் கூறி, போலீசார் யோவான் ஸ்டாலினை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
"பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த நபருக்கு ஆதரவாகப் போராடியதால், திட்டமிட்டே காவல்துறையினர் யோவான் ஸ்டாலின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து பழிவாங்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்" என விசிக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரும்பாக்கத்தில் வெடித்த போராட்டம்
காவல்துறையின் ஒருதலைப்பட்சமான மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவான போக்கைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - CPIM), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மற்றும் சிபிஐ (எம்எல்) (CPI-ML) ஆகிய கட்சிகள் இணைந்து அரும்பாக்கம் கடைவீதியில் மிக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
அப்போது;
* பாலியல் வன்கொடுமை மற்றும் சாதியத் தாக்குதலில் ஈடுபட்ட எஞ்சிய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் கைது செய்ய வேண்டும்.
* வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயலும் பெரம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* விசிக மாவட்டத் துணைச் செயலாளர் யோவான் ஸ்டாலின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும்.
கண்டன முழக்கங்கள்
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்டச் செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மிகக் கடுமையான கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சாதிய வன்மத்துடன் செயல்பட்ட கும்பலுக்கு பெரம்பூர் காவல்துறை துணை போவதாகக் கூறி, போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ததால், அரும்பாக்கம் கடைவீதி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























