"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி...
மயிலாடுதுறை அருகே வெயிலின் கொடுமையால் வாழைப்பழம் வேண்டாம் என மறுத்து, நுங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சிங்கனோடை கிராமத்தில், கோடை வெப்பத்தின் தாக்கத்தால் மனிதர்களைப் போலவே குரங்கு ஒன்று நுங்கு கேட்டு அடம் பிடித்து வாங்கிச் சாப்பிட்ட சுவாரஸ்யமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்டி வதைக்கும் கோடை வெயில்
தமிழகம் முழுவதும் நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சதத்தை தாண்டி பதிவாகி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் நுங்கு போன்ற இயற்கை பானங்களை நாடிச் செல்கின்றனர்.
குறிப்பாக, எந்தவிதமான ரசாயன கலப்பும் இன்றி இயற்கையாகக் கிடைக்கும் பனை நுங்கிற்கு கோடை காலங்களில் எப்போதும் தனி மவுசு உண்டு. இதனால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாழைப்பழத்தை நிராகரித்த குரங்கு
தரங்கம்பாடி தாலுகா, சிங்கனோடை கிராமத்தின் முக்கியச் சாலை ஓரத்தில் வியாபாரி ஒருவர் பனை நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று, திடீரென வியாபாரியின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டது. அவரது சட்டையைப் பிடித்து இழுத்து, ஏதோ கேட்பது போல விசித்திரமான சத்தங்களை எழுப்பி சமிக்கைகள் செய்தது.
"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி... pic.twitter.com/QPvionaKb6
— JAGANNATHAN (@Jaganathan_JPM) April 29, 2026">
குரங்கு பசியால் வாடுகிறது என்று எண்ணிய வியாபாரி, தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை எடுத்து நீட்டினார். ஆனால், வழக்கமாக வாழைப்பழத்தை விரும்பி உண்ணும் குரங்கு, அதனைத் தொடக்கூட மறுத்துவிட்டது. மாறாக, வியாபாரி வெட்டி வைத்திருந்த நுங்குப் பெட்டியையே கூர்ந்து கவனித்து மீண்டும் அடம் பிடிக்கத் தொடங்கியது.
"குரங்குகளுக்கு வாழைப்பழம் தான் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால், இந்த வெயிலில் அதற்கு தாகம் அதிகமாக இருப்பதால் நான் கொடுத்த பழத்தை தட்டிவிட்டு நுங்குக்காக அது செய்த சேட்டைகள் என்னை வியக்க வைத்தன" என்கிறார் அந்த நுங்கு வியாபாரி.
சுவைத்த நுங்கும்.. மீண்டும் வந்த அடம் பிடிப்பும்..
விலங்கின் தாகத்தை உணர்ந்துகொண்ட வியாபாரி, உடனடியாக ஒரு நுங்கினைச் சீவி அதன் கையில் கொடுத்தார். நுங்கைப் பெற்றுக்கொண்ட அந்த குரங்கு, மின்னல் வேகத்தில் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து, மிகுந்த உற்சாகத்துடன் அதனைச் சுவைக்கத் தொடங்கியது. மனிதர்கள் வெயிலுக்கு இதமாக நுங்கு சாப்பிடுவதைப் போலவே, அந்த குரங்கும் ஒவ்வொரு சொட்டு நீரையும் விடாமல் ருசித்து உண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருமுறை சாப்பிட்டு முடித்தவுடன் அந்த குரங்கு அங்கிருந்து சென்றுவிடவில்லை. மீண்டும் கீழே இறங்கி வந்த அது, வியாபாரியிடம் வந்து இரண்டாவது முறை நுங்கு கேட்டு அடம் பிடித்தது. காலையிலிருந்து வியாபாரம் மந்தமாக இருந்தபோதிலும், அந்த வியாபாரி சற்றும் சளைக்காமல் மகிழ்ச்சியுடன் மீண்டும் நுங்குகளை வெட்டி அந்த குரங்கிற்கு வழங்கினார்.
வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்
சாலையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் குரங்கின் இந்த விநோதச் செயலைக்கண்டு ஆச்சரியமடைந்து தங்களது பயணத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இயற்கை உணவான நுங்கின் மருத்துவக் குணத்தை விலங்குகளும் உணர்ந்துள்ளனவா? வெப்பத்தின் தாக்கம் விலங்குகளையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?
என்ற விவாதங்கள் அங்கிருந்தவர்களிடையே எழுந்தன. பொதுவாக குரங்குகள் காடுகளில் உள்ள பழங்களையும், மனிதர்கள் தரும் பிஸ்கட், பழங்கள் போன்றவற்றை மட்டுமே உண்ணும். ஆனால், தாகத்தைத் தணிக்க நுங்குதான் சிறந்தது என்பதை ஒரு மனிதனைப் போலவே உணர்ந்து அடம் பிடித்த இந்த நிகழ்வு, சிங்கனோடை கிராமத்தில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.
இயற்கையின் பாடம்
மனிதர்களைப் போலவே ஐந்தறிவு ஜீவன்களும் கோடை வெப்பத்தின் கொடுமையால் தவித்து வருகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது. விற்க வேண்டிய பொருளைப் லாப நோக்கமின்றி ஒரு வாயில்லா ஜீவனுக்கு வழங்கிய அந்த வியாபாரியின் மனதாரப் பாராட்டிய கிராம மக்கள், "மனித நேயம் மனிதர்களிடம் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களிடமும் அன்பாக இருப்பதில்தான் அடங்கியிருக்கிறது" என நெகிழ்ச்சியுடன் கூறினர். கோடையின் உச்சத்தில் தாகத்தை தணிக்கத் தவித்த குரங்கிற்கும், அதற்கு அன்புடன் நுங்கு வழங்கிய வியாபாரிக்கும் இடையேயான இந்த உறவு, அந்தப் பகுதியில் ஒரு அழகான சித்திரமாகப் பதிவாகியுள்ளது.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























