மயிலாடுதுறை மீனவர்கள் கவனத்திற்கு : உங்கள் உறவினர்கள் ஈரானில் சிக்கியுள்ளார்களா? விவரங்களை உடனே சமர்ப்பியுங்கள்...
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் மீனவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழல் காரணமாக, ஈரான் நாட்டில் தங்கியிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
போர் சூழல்
தற்போது வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் அசாதாரண போர்ச் சூழ்நிலை காரணமாக, அங்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, ஈரான் நாட்டில் தங்கியுள்ள தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப உதவி கோரி வருகின்றனர். இவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, ஈரானில் சிக்கியுள்ள சுமார் 595 மீனவர்களின் பட்டியல் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் இடம்பெற்றுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணிக்கையில் முரண்பாடு - சரிபார்ப்பு அவசியம்
இருப்பினும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 490 மீனவர்களின் விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மாநில அரசு மற்றும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களுக்கு இடையே உள்ள இந்த முரண்பாடுகளைக் களைந்து, உண்மையில் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக உறுதிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகிறது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எவரேனும் தற்போது ஈரானில் தங்கியிருந்தால், அவர்களின் விவரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்கள்
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, பின்வரும் அவசர காலத் தொடர்பு எண்களை மீனவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம்:
*தூதரக உதவி எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359
*மின்னஞ்சல் முகவரி: cons.tehran@mea.gov.in
மாவட்ட அளவிலான உதவி மையங்கள்:
மீனவர்களின் விவரங்களைச் சரிபார்க்கவும், கூடுதல் தகவல்களை வழங்கவும் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு
* உதவி இயக்குநர் அலுவலகம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.41/A, பெஸ்ட் பள்ளி எதிரில், சீர்காழி- 609111. 04364-271455
* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம், மீன்பிடித் துறைமுகம், பழையார் - 79044 28026
* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் அலுவலகம், மீன்பிடித் துறைமுகம், தரங்கம்பாடி - 63698 64872
ஆட்சியரின் வேண்டுகோள்:
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "போர்ச் சூழலில் சிக்கியுள்ள நமது மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்பதே அரசின் முதன்மை நோக்கமாகும். எனவே, மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஈரானில் உள்ள மீனவர்களின் தற்போதைய நிலை குறித்த சரியான தகவல்களை மேற்கூறிய அலுவலகங்களில் உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தூதரகத்தின் மூலம் உரிய உதவிகளை வழங்கவும் இயலும்," எனத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மீனவக் கிராமங்களில் உள்ள சங்கங்களும், பொதுமக்களும் இந்தத் தகவலை உரியவர்களுக்குக் கொண்டு சேர்த்து, முழுமையான விவரங்களை வழங்க ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
























