பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு..! எதற்கு தெரியுமா?
தங்கள் வளாகத்தைப் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளின் (Single Use Plastics - SUP) பயன்பாட்டைத் தடுத்து, பாரம்பரியச் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றான "மஞ்சப்பை"யின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இதன் ஒரு பகுதியாக, 2022-23 நிதியாண்டிற்கான “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் எனச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.
இந்த விருதுகள், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையைத் திறம்படச் செயல்படுத்தி, தங்கள் வளாகத்தைப் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
விருதுகள் மற்றும் பரிசுத் தொகை
“மஞ்சப்பை விருதுகள்” மூன்று பிரிவுகளில், அதாவது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
* முதல் பரிசு: ரூ.10 லட்சம்
* இரண்டாம் பரிசு: ரூ.5 லட்சம்
* மூன்றாம் பரிசு: ரூ.3 லட்சம்
மொத்தம் 9 நிறுவனங்களுக்கு இந்த மதிப்புமிக்க விருதுகளும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
விருதுகளுக்கான தகுதி மற்றும் நோக்கம்
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த நிறுவனங்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தகுதி பெறும் நிறுவனங்கள்
* பள்ளிகள் (சிறந்த 3 பள்ளிகள்)
* கல்லூரிகள் (சிறந்த 3 கல்லூரிகள்)
* வணிக நிறுவனங்கள் (சிறந்த 3 வணிக நிறுவனங்கள்)
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தைப் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகளை வழங்க முன்மொழிகிறது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி
இந்த விருதுகளுக்குத் தகுதியுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது பங்களிப்புகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள்
விண்ணப்பப் படிவங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சமர்ப்பிக்கும் முறை: விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் அல்லது அமைப்புத் தலைவர் முறையாகக் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
* விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடித நகல்) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அலுவலகம், அறை எண். 613 -இல் பசுமை தோழர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கடைசி தேதி: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.01.2026 ஆகும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, பிளாஸ்டிக் இல்லாத சமூகத்தை உருவாக்கத் தன்னார்வத்துடன் செயல்படும் நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. பிளாஸ்டிக் அற்ற வளாகத்தை நோக்கிப் பயணிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழக அரசின் உயரிய விருதைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






















