மயிலாடுதுறை பரபரப்பு: கடவுளை கடத்திய இளைஞர்கள்... தட்டித்தூக்கிய காவல்துறை..
மயிலாடுதுறை அருகே கோயிலில் ஐம்பொன் அம்மன் சிலையை திருடிய வழக்கில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஐம்பொன் சிலை உள்ளிட்ட பொருட்களை கைபற்றியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட அப்புராசபுத்தூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் நடந்த கோயில் கொள்ளை வழக்கில், கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளைப் பொருட்களுடன் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை பொறையார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோயில் கொள்ளை: பின்னணி விவரங்கள்
கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி (08.11.2025) இரவு நேரத்தில், அப்புராசபுத்தூரில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தின் பூட்டப்பட்டிருந்த முன் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது, சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையையும் மற்றும் கோவிலில் இருந்த பித்தளைப் பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, கோவில் அர்ச்சகர் ராமலிங்கம் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, பொறையார் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, இவ்வழக்கில் கொள்ளையடித்த எதிரிகளைக் கைது செய்யவும், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளை மீட்கவும், பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி ஆகியோரின் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் தீவிரப் புலன் விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து எதிரிகள் தேடப்பட்டு வந்த நிலையில், விசாரணையில் மேற்கண்ட குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தெரியவந்தது.
குற்றவாளிகள் அடையாளம் மற்றும் கைது
காவல்துறை விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மயிலாடுதுறை பூக்கொல்லை, தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி மகன் 20 வயதான ராஜசேகரன் மற்றும் மயிலாடுதுறை கூரைநாடு, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் 19 வயதான முகமது அலி என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து
இவர்கள் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேற்கண்ட குற்றச் சம்பவத்தில் இவர்கள் இருவரும் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
கொள்ளைப் பொருட்கள் மீட்பு மற்றும் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் கொள்ளையடித்துச் சென்ற ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை மற்றும் மற்ற பித்தளைப் பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து மீட்டெடுத்தனர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
காவல்துறையினருக்குப் பாராட்டு
இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு, குறுகிய காலத்தில் எதிரிகளைக் கண்டுபிடித்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளையும் மீட்க அலுவல் புரிந்த தனிப்படையினரை, மயிலாடுதுறை (பொறுப்பு), நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வெகுவாகப் பாராட்டினார்.
இந்தச் சம்பவம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் சொத்துகளின் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், காவல்துறையின் துரித நடவடிக்கையின் மூலம் சட்ட விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.






















