இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - மயிலாடுதுறையில் சோகம்
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனமொத்து வாழ்ந்த வயோதிக தம்பதியினர் இறப்பிலும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் ஒரே நாளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனைவி இறந்த நிலையில், துக்கம் தாளாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.s
இறப்பில் இணைந்த தம்பதியர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடி நடுத்தெருவில் வசித்தவர்கள் வயது முதிர்ந்த 86 வயதான கலியபெருமாள் அவரது மனைவி 71 வயதான வேம்பு தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் 4 மகள்கள். ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்யும் மூத்த மகன் ரவியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உடல் நல குறைவு ஏற்பட்ட வேம்பு நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

மனைவி இறப்பை கேட்டு கணவர் உயிரிழப்பு
மனைவி இறந்த தூக்கம் தாழாமல் வேதனையில் படுத்திருந்த கணவர் கலியபெருமாள் எழுந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்கு கலியபெருமாளும் உயிரிழந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இருவரையும் ஒரே நேரத்தில் இடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.
சோகத்தை பகிர்ந்த உறவினர்கள்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த தம்பதியினருக்கு திருமண நடைபெற்று 50 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையின் அடையாளமாக ஆறு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இதுநாள் வரை இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது மனைவி பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். கணவர் மனைவி இருவரின் இறப்பு செய்தி கேட்டு கேட்பவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெகிழ்ச்சியும், வயோதிக தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






















