மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்ம மரண விவகாரத்தில், பெண் வீட்டார் மற்றும் உறவினர்களின் வீடுகளை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதலித்த இளம் ஜோடிகள் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட விவகாரத்தை ஆணவக் கொலை வழக்காக மாற்றக் கோரி பதற்றம் நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சம்பவத்தன்று பெண் வீட்டார் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை ஒரு கும்பல் கட்டை, கற்களால் அடித்து நொறுக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
காதலர்கள் மரணமும் எழுந்த ஆணவக் கொலை புகாரும்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (19). இவரும், சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோர் இடையேயும், குறிப்பாகப் பெண் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கொட்டகையில் பார்த்திபனும், அந்தச் சிறுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொறையார் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக ‘இயற்கைக்கு மாறான மரணம்’ (சந்தேக மரணம்) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பெண் வீட்டாரே இவர்களைத் திட்டமிட்டு ‘ஆணவப் படுகொலை’ செய்துவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டதாகப் பார்த்திபனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு, இந்த விவகாரத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உடல்கள் அடக்கம் - தொடரும் போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல், பெண் வீட்டாரால் மயிலாடுதுறையில் தகனம் செய்யப்பட்டது. அதேபோல், காதலன் பார்த்திபனின் உடலும் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான தரங்கம்பாடியில் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இரு கிராமங்களுக்கும் இடையே நிலவும் சாதி ரீதியிலான பதற்றம் காரணமாகப் போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்: அலறிய குடும்பத்தினர்
இந்தச் சூழ்நிலையில்தான், காதலர்கள் சடலமாக மீட்கப்பட்ட கடந்த 29-ஆம் தேதி அன்றே, காதலன் பார்த்திபனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, இறந்த காதலி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளைத் தாக்கிய அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோ காட்சிகளில், ஏராளமான ஆக்ரோஷமான நபர்கள் கைகளில் கட்டைகள், இரும்பு கம்பிகள் மற்றும் கற்களை ஏந்தியபடி வீட்டை முற்றுகையிடுகின்றனர். பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் மற்றும் வெளியே நின்றிருந்த வாகனங்களை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்குகின்றனர். ஆண்கள், பெண்கள் எனப் பாராமல் கற்களை வீசித் தாக்கும் போது, வீட்டிற்குள் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிருக்குப் பயந்து அலறும் சத்தம் உள்ளிட்ட பதைபதைக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
ஐந்து பேர் அதிரடி கைது: சிறையிலடைப்பு
சம்பவம் நடந்த அன்று காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், தாக்குதல் நடத்தப்பட்ட போது அங்கிருந்தவர்களால் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி, மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொறையார் போலீசார், தற்போது வெளியாகியுள்ள வீடியோ பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காதலியான 17 வயது சிறுமி வீடு மற்றும் அவரது உறவினர் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டைச் சேதப்படுத்தியதாக, இறந்த காதலன் பார்த்திபன் தரப்பைச் சேர்ந்த கமலஹாசன் (38), ஜெயின் ராஜ் (31), ராஜீ (28), சுதர்சன் (19), திருமாவளவன் (26) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு விபரம்
கைது செய்யப்பட்டவர்கள் மீது வீட்டைச் சேதப்படுத்தியது, பெண்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட மற்ற நபர்களின் அடையாளங்களைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























