மேலும் அறிய
சிவகங்கை மண்ணெண்ணெய்: SMS-ல் முழு அளவு, உண்மையில் குறைவு.. சிறப்பு ஆய்வுக்கு கோரிக்கை !
சிவகங்கை மாவட்டத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடு? சிறப்பு ஆய்வுக்கு கோரிக்கை.

மண்ணெண்ணெய் முறைகேடு?
Source : whatsapp
குடும்ப அட்டைதாரர்களுக்கு அனுப்பப்படும் TNEPDS குறுஞ்செய்தி (SMS) பதிவுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் சிறப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மண்ணெண்ணெய், உணவுப் பொருள் வழங்கல்
சிவகங்கை மாவட்டத்தில் 4,19,373 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றுக்கு 829 நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் ஒன்பது வட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஒரு எல்பிஜி சிலிண்டர் இணைப்பு மட்டுமே உள்ள குடும்பங்களுக்கும், எல்பிஜி இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கும் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இரண்டு எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் கொண்ட குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், வழக்கமான 84 கிலோலிட்டர் (84,000 லிட்டர்) மாதாந்திர ஒதுக்கீட்டுடன் கூடுதலாக 12 கிலோலிட்டர் (12,000 லிட்டர்) சேர்த்து மொத்தம் 96 கிலோலிட்டர் (96,000 லிட்டர்) மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், தற்போது மீண்டும் வழக்கமான 84 கிலோலிட்டர் (84,000 லிட்டர்) மாதாந்திர ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நுகர்வோருக்கு உரிய அளவு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. சில நியாயவிலைக் கடைகளில் 3 லிட்டருக்கு பதிலாக 2 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், சில இடங்களில் 50 முதல் 100 மில்லி வரை குறைத்து வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் TNEPDS குறுஞ்செய்தியில் முழு அளவு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருப்புவனம் அருகே உள்ள ஒரு நியாயவிலைக் கடையில், 2 லிட்டர் மட்டுமே பெற்ற குடும்ப அட்டைதாரருக்கு 3 லிட்டர் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததாகவும், சிலருக்கு கடைக்குச் செல்லாத நாளிலேயே பொருட்கள் பெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதனால் மின்னணு பதிவுகளின் துல்லியம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
மண்ணெண்ணெய் சேமிப்பு
மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் சேமிப்பு மையங்களிலிருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் முழுமையாகவும், முறையாகவும் சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சில சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மண்ணெண்ணெய் போக்குவரத்து தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் நிலையில், விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் ஒதுக்கீட்டு அளவு, போக்குவரத்து விவரங்கள் மற்றும் விநியோகப் பதிவுகளை ஒப்பிட்டு தணிக்கை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம்.
மேலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் பெரும்பாலும் இரவு நேரங்களில் நியாயவிலைக் கடைகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும், டேங்கர் வாகனங்களில் இருந்து நேரடியாக இறக்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய், சில இடங்களில் பேரல்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த தகவல்களின் உண்மைத் தன்மையையும் சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிகுமாரிடம் கேட்டபோது, "நுகர்வோருக்கு உண்மையில் வழங்கப்பட்ட அளவு மட்டுமே TNEPDS பதிவில் இடம்பெற வேண்டும். அதற்கு மாறாக பதிவுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நுகர்வோர் குறுஞ்செய்தி உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, முறைகேடு உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். தொடர்ந்து வெளியாகும் புகார்களின் பின்னணியில், திருப்புவனம் மண்ணெண்ணெய் சேமிப்பு மையத்திலிருந்து அனுப்பப்படும் அளவு, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அளவு மற்றும் TNEPDS மின்னணு பதிவுகளை ஒப்பிட்டு, மாவட்டம் முழுவதும் சிறப்பு தணிக்கை மற்றும் ஆய்வு நடத்த வேண்டும் என்று நுகர்வோரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















