பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய நபர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா குறித்த தேதி உறுதியாகவில்லை.
புதிய பாம்பன் ரயில் பாலம்
ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே ரூ. 550 கோடி செலவில் 2.05 கிலோமீட்டர் நீளமுள்ள, புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலைக் வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது. இது பழைய பாலத்தில் கடக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்து, பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, திறப்பு விழாவிற்கே தயாராகி விட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி புதிய பாலத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி, பாதுகாப்பு குறித்த யோசனைகளையும் வழங்கினார். இதனால் சரி செய்ய கால தாமதம் ஏற்பட்டு பாலம் திறப்பு குறித்த தேதி தள்ளிப் போனது.
கிடப்பில் போடப்பட்ட பாம்பன் பாலம் திறப்பு
டிசம்பர் மாதத்தில் இறுதிக்குள் குறைகள் சரி செய்யப்பட்டு 100% பாலத்தின் பணியானது நிறைவடைந்தது. புதிய பாலம் பாதுகாப்பாக உள்ளது, உறுதி சோதனையிலும் வெற்றியடைந்துவிட்டது என பொறியாளர்கள் தெரிவித்தனர். இதன்பின் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்து மார்ச் இறுதியில் திறப்பு விழா நடக்கும் என தெரிவித்தார். ஆனால் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யாமல் ரயில்வே அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் புதிய ரயில் பாலம் 3 மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
சிரமத்திற்கு ஆளாகும் பயணிகள்
தமிழகம் உள்ள வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் வரும் பக்தர்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தனியார் வாகனத்தில் ராமேஸ்வரம் வருகின்றனர். பெண்கள், முதியோர், குழந்தைகளுடன் வருபவர்கள் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. தனியார் வாகனங்களும் சமயத்தை பயன்படுத்தி ரூபாய்1000 முதல் ரூ.2500 வரை வாடகை கொடுக்க வேண்டிய கஷ்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திறப்பு விழா தாமதம்
புதிய பாலத்தின் கட்டுமானத்தில் எஃகு வலுவூட்டல், கூட்டு ஸ்லீப்பர்கள் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஓவிய அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2019 நவம்பரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார், மேலும் 2020 பிப்ரவரியில் RVNL இன் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் இது டிசம்பர் 2021 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மார்ச் முதல் வாரம் அல்லது இறுதியில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய நபர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா குறித்த தேதி உறுதியாகவில்லை.
பாலம் திறப்பு தாமதம் ஏன்?
புதிய பாம்பன் பாலம் ஆசியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என போற்றப்படுகிறது. எனவே இதனை மிகப்பெரும் கனவு திட்டமாக மத்திய அரசு கருதுகிறது. இதற்காக திறப்புவிழாவை உலக தரத்திற்கு நடத்த வேண்டும். உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் மீடியாக்கள் மூலம் வெளிக் கொண்டுவர வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு நிகழ்ச்சிக்கு அதிகளவு செலவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு என்பதால் இதற்கான செலவு தொகை ஒதுக்குவதில் சிரமம் ஏற்படுவதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.