பழனி முருகன் கோயில்: ரோப் கார் சேவை நிறுத்தம்! பக்தர்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு வெளியீடு
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை 15ம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும், பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளது. பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆகியோர் மேற்கண்ட படிப்பாதைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது. இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு 15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு 50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் வசதியை தேர்வு செய்கிறார்கள். ஆகையால் மாதாந்திரம், வருடாந்திரம் என ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ரோப் கார் சேவை வருகிற 15.07.25 முதல் 31நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் ,உருளைகள் ,பெட்டிகள் பொருத்தபட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் ஐஐடி வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், பக்தர்கள் படிப்பாதை , யானை பாதை ,மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவித்துள்ளது.





















