மேலும் அறிய
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! முக்கிய சாலைகளில் ஒரு வழிப்பாதை - காரணம் என்ன?
தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக வரும் 15.10.2025 காலை முதல் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகர்
Source : whatsapp
மதுரை மாநகர் போக்குவரத்து மாற்றம்
மதுரை நகர் மற்றும் பிறமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் அருள்மிகு ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலுக்கும், நகைக் கடைகளுக்கும் மற்றும் ஜவுளிக்கடைகளுக்கும் செல்ல பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலையாக நேதாஜி ரோடு அமைந்துள்ளது. மேலும் சாலையில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் சந்திப்பாக மேலமாசிவீதி, நேதாஜி ரோடு சந்திப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் அதிக வாகன போக்குவரத்து மற்றும் அதிக பாதசாரிகளின் வருகை, பின் காரணமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள சந்திப்பாக இச்சந்திப்பானது மாறியுள்ளது. மேலும் இச்சந்திப்பில் பொதுமக்கள் அதிகமனோர் வந்து செல்லும் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. தற்போது திபாவளிப்பண்டிகை விழாக்காலம் என்பதால் மேலமாசிவீதி, நேதாஜி ரோடு சந்திப்பு, மற்றும் நேதாஜி ரோடு மேலும் அதிகமான வாகன போக்குவரத்து மற்றும் அதிக பாதசாரிகளின் வருகையின் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தேக்கநிலை ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்கு தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக வரும் 15.10.2025 காலை முதல் கீழ்கண்ட ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
KPS சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு மற்றும் ஜம்ஜம் சந்திப்பிலிருந்து மேலவடம்போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது.
i) அதன்படி KPS சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு வழியாக எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் TPK ரோடு ஜம்ஜம் ஸ்வீட்ஸ் சந்திப்பில் இடது புறம் திரும்பி மேலவடம்போக்கி தெரு வழியாக DM கோர்ட் சந்திப்பிற்கு சென்று மேலமாசிவீதி செல்ல வேண்டும்.
ii) DM கோர்ட் சந்திப்பிலிருந்தும் கூடலழகர் பெருமாள் கோவில் சந்திப்பிலிருந்தும் எந்த ஒரு வாகனமும் மேலவடம்போக்கி தெரு வழியாக TPK ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் DM கோர்ட் சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி நேதாஜி ரோடு வழியாக TPK ரோடு செல்ல வேண்டும். மேலவடம்போக்கி தெருவில் எந்த ஒரு வாகனமும் தீபாவளி வரை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
iii) ஜான்சி ராணி பார்க் முதல் முருகன் கோவில் வரை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலக்கோபுரத்தெரு, மேலஆவணிமூலவீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேராக நேதாஜி ரோடு முருகன் கோவில் செல்லாமல் மீனாட்சி பேருந்து நிலையம், கான்சாமேட்டுத்தெரு, DM.கோர்ட், மேலமாசிவீதி வழியாக முருகன் கோவில் சந்திப்பு செல்ல அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மேலமாசிவீதியிலிருந்து ஆரியபவன் சந்திப்பு வழியாக ஜான்சி ராணி பார்க் செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல் முருகன் கோவில் வழியாக ஜான்சி ராணி பார்க் செல்லாம்.
iv) பெருமாள் தெப்பம் சந்திப்பிலிருந்து எந்த ஒரு வாகனங்களும் நேதாஜி ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் ரோடு வழியாக செல்ல வேண்டும். நேதாஜி ரோட்டிலிருந்து பச்சை நாச்சியம்மன் கோவில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு வாகனங்கள் செல்லலாம். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இம்மாறுதலுக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















