மேலும் அறிய
மதுரையில் தைப்பூசம்: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நீர் மோர் பந்தல்.. அனைவரையும் கவர்ந்த நெகிழ்ச்சி!
மதுரையில் தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – சே குவேரா கிளை சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

தைபூசம்
Source : whatsapp
தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
தைப்பூசம்
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது, தைப்பூச நாள் என்பதால் இந்த நாள் தமிழர்களால் மிகவும் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஆலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வர். தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர் மலேசியா என உலகெங்கிலும் உள்ள முருகனின் திருக்கோவில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த நாளில் முருகன் கையில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
திருப்பரங்குன்றம் சாமி தரிசனம்
அதன் ஒரு பகுதியாக ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோவிலுக்கு இடப்புறமாகவும் இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோவிலுக்கு வளப்புறமாகவும் கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அமைதரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் திருப்பரங்குன்றம் கோவிலின் உப கோவில் ஆன காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோட்டைதெரு பழனி ஆண்டவர் சந்நிதியில் பழனியாண்டவருக்கு காலை 10 மணிக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீர்மோர் வழங்கப்பட்டது
மதுரை : தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – சே குவேரா கிளை சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நீர்–மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பகுதி குழு துணைச் செயலாளர் பாலசிங்கம் தலைமையிலும், கிளைச் செயலாளர் சிவரஞ்சனி, பகுதி குழு செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு பங்கேற்பாளர்களாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வேல் தேவா, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் கௌதம் பாரதி கலந்து கொண்டனர். மேலும் மதுரை பல் சமய உரையாடல் குழு சார்பில் அருட்பணி பெனடிக்ட் பர்னபாஸ், பால் பிரிட்டோ, ஜேம்ஸ் பால்ராஜ், இன்னாசி அற்புதராஜ், சந்தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன் அப்துல்லா, போனி ஃபேஸ் (தமிழ்நாடு சிறுபான்மை நல குழு – மாநில குழு உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்ட இந்நிகழ்வு, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























