மேலும் அறிய
மதுரை ரயில் நிலையம் பணிகள் 50% நிறைவு... பயணிகளுக்கு காத்திருக்கும் நவீன வசதிகள்!
மதுரை ரயில்நிலையத்தில் மேற்கு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஒரு அடுக்கு கொண்ட 2,580 சதுர அடி வாகன காப்பகமும் அமைக்கப்படும்.

மதுரை ரயில்நிலையம்
Source : whatsapp
Madurai Railway Station - மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி மறுசீரமைப்பில் கட்டப்படும் கட்டடங்கள் பசுமை கட்டிடங்களாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகத் தரத்திற்கு உயரும் மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம் பயண கட்டண வருவாய் அடிப்படையில் புறநகர் அல்லாத ரயில் நிலைய பிரிவு 2 என தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் தினந்தோறும் 96 ரயில்களை கையாண்டு சராசரியாக 51,296 பயணிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த முக்கியமான ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மறு சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. மறுசீரமைப்பு பணிகளை ரூபாய் 347.47 கோடி செலவில் மேற்கொள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
மறு சிரமைப்பு பணிகள் விபரம்
ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலிலும் மேற்கு நுழைவாயிலிலும் நிலைய முனைய கட்டடங்கள் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு பக்கத்தில் இரு பல்லடுக்கு வாகன காப்பகங்கள் மற்றும் மேற்கு பக்கத்தில் ஒரு பல்லடுக்கு வாகன காப்பகமும் அமைக்கப்படும். மேலும் ரயில் நிலையத்தையும் பெரியார் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப் பாதை, பார்சல்களை நடைமேடைகளுக்கு மாற்ற தனி நடை மேம்பாலம், நேரடியாக இருபுறமும் வாகன காப்பகங்களுக்கு செல்ல இரண்டு நடை மேம்பாலங்கள் ஆகியவை அமைக்கப்படும்.
கிழக்கு முனைய கட்டடம்
கிழக்கு முனைய கட்டடம் இரண்டு மாடியுடன் 22,576 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டட முகப்பு மதுரை நகர பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் அமையும். தரைதளத்தில் உலக தரத்தில் கழிப்பறைகள், பொருள் வைப்பறை, உதவி மையங்கள், குழந்தை பராமரிப்பு பகுதி போன்றவை அமைக்கப்படும். நிலையத்திலிருந்து ரயிலில் புறப்படும் பயணிகள் மற்றும் வருகை தரும் பயணிகள் தனித்தனியாக வந்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முதல் தளத்தில் காத்திருப்பு அறைகள், தங்கும் அறைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், கழிப்பறைகள் அமையும். இரண்டாவது தளம் வணிகப் பயன்பாட்டுக்காக உபயோகிக்கப்படும்.
ரயில் பாதைக்கு மேல் காத்திருக்கும் பகுதி
ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக இரண்டு முனையை கட்டிடங்களையும் இணைத்து ரயில் பாதைக்கு மேல் 110 மீட்டர் அகலத்தில் காத்திருப்பு தளம் அமைக்கப்படும். கிழக்கு முனையை கட்டிட முதல் தளத்திலிருந்து இந்த காத்திருப்பு தளத்திற்கு பயணிகள் செல்ல முடியும். அங்கிருந்து நடைமேடைகள் வரும் ரயில்களையும் பார்க்க முடியும். மேலும் ரயில் வரும்போது 4 படிக்கட்டுகள், இரண்டு ஜோடி நகரும் மின் படிக்கட்டுகள், இரண்டு முன் தூக்கிகள் வாயிலாக நடைமேடைகளை சென்று சேர முடியும்.
மேற்கு முனையை கட்டிடம்
மேற்கு பகுதியில் இரு மாடி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பயணச்சீட்டு அலுவலகங்கள், ரயில்வே சேவை அலுவலகங்கள், தேவையான பயணிகள் வசதிகள் ஆகியவை அமைக்கப்படும்.
பல்லடுக்கு வாகன காப்பகம்
கிழக்குப் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இரண்டு அடுக்குகள் கொண்ட 9,430 சதுர அடி வாகன காப்பகமும், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த மூன்று அடுக்கு கொண்ட 2,822 சதுர அடி வாகன காப்பகம் அமைக்கப்படும். மேலும் மேற்கு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஒரு அடுக்கு கொண்ட 2,580 சதுர அடி வாகன காப்பகமும் அமைக்கப்படும்.
அணுகு சாலைகள் அமைக்கப்படுகிறது.
தங்குதடையற்ற பயணிகள் வருகைக்காக திட்டமிடப்பட்ட அணுகு சாலைகள் அமைக்கப்படுகிறது. நேரடியாக பேருந்து நிறுத்தம் மற்றும் ஆட்டோ நிறுத்திமிடம் ஆகியவற்றிற்கு செல்வதற்கு தனியாக நடை மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி மறுசீரமைப்பில் கட்டப்படும் கட்டிடங்கள் பசுமை கட்டடங்களாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 50 % பணிகள் நிறைவடைந்துள்ளது, என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
"விஜய் நீங்க பேசுனது சரியல்ல ஸ்டாலினை ஏளனம் செய்யாதீங்க" சப்போர்ட்டுக்குவந்த திருமா!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















