Madurai ; ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு: 9 ஆண்டுகளுக்குப் பின் போராட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றி!
9 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை, மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றி.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்கு - அனைவரையும் விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடந்த 2016 - 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற நபர்கள் மீது சி.பி.சி.ஐ.,டியால் வழக்கு பதிவு செய்யப்பட்டுது. இது தொடர்பாக 9 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும், 'இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்' என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மக்கள், இறுதியில் ஏமாற்றத்தையே சந்தித்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில், ஒவ்வொரு ஆண்டும் தை 3ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி அடையாளப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அப்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். ஆனாலும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாணவர்களும் இளைஞர்களும் தன்னிச்சையாக போராட்டக்களத்தில் குதித்தனர். இதற்கிடையே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஒரு லட்சம் பேர் திரள்வோம் என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் அலங்காநல்லூர் வாடிவாசலில் பகல் முழுவதும் போராடினர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டனர். தமிழக காவல்துறை, 'ஜல்லிக்கட்டு நடக்காது, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்' என்று அறிவுறுத்தியது. போராட்டக்காரர்கள், 'குறைந்தது 5 கோயில் காளைகளையாவது வாடிவாசல் வழியாக விடுங்கள்; பிறகு நாங்கள் கலைந்து செல்கிறோம்'
என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி அரசு தரப்பு மறுத்தது.
போராட்டக்காரர்களுக்கு உணவு சமைத்து வழங்கினர்
இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அச்சமயம் ஊடகங்கள் முழுவதும் இச்செய்தியை ஒளிபரப்ப பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூர் பொதுமக்கள் காவல்துறை நெருக்கடிகளையும் மீறி போராட்டக்காரர்களுக்கு அவர்களே உணவு சமைத்து வழங்கினர். அடுத்த நாள் அதிகாலை, அலங்காநல்லூரை நோக்கி மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வர தயாராக இருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து, அலங்காநல்லூர் பெண்கள் முதலில் களத்தில் இறங்கினர். பின்னர் மெரினா, சேலம், கோயம்புத்தூர், மதுரை என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டம்
அப்போது மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 21.01.2017 அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது.
ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம்; நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன. அச்சமயம் அலங்காநல்லூரில் போராடிய 63 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 2018 முதல் விசாரணை நீடித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டு அவர்களும் வழக்கு சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்காக வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தது.
சிபிசிஐடி வழக்கு
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர், வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்'என்று அறிவித்தார். ஆனால் மதுரை மாவட்ட சிபிசிஐடி வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படாமல், போராட்டக்காரர்கள் சுமார் 200 பேர் மீது வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இவர்களின் 64 பேர் மீதான வழக்கு மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அவர்களில் 3 பேர் காலமான நிலையில், எஞ்சியுள்ள அனைவரையும் மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
பாராட்டு விழா நடத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றார்.
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சரவணன் கூறுகையில்...,”கடந்த 9 ஆண்டுகளாக இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு பல்வேறு சிக்கன்களுக்கு இடையே வருகை தந்து நடத்தியுள்ளனர். இவர்களின் போராட்டத்தால் தான் ஜல்லிக்கட்டு தற்பொழுது நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன அவற்றையெல்லாம் தற்போதைய தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை சந்தித்த நபர்கள் அனைவருக்கும் பாராட்டு விழா நடத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றார்.























