மேலும் அறிய
அரசு ஓட்டலில் இத்தனை வசதியா? மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி !
நவீன வசதிகளுடன் கூடிய நிகழ்விடங்கள், உணவறைகள், சமையலறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஓட்டல் தமிழ்நாடு அனைவருக்கும் பயனாக இருக்கும்.

ஓட்டல் தமிழ்நாடு மதுரை
Source : whats app
மதுரை ஓட்டல் தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டடம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கூடுதல் கட்டடம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் திறப்பு
தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க மதுரை மாநகரின் மையப்பகுதியில் ஓட்டல் தமிழ்நாடு மதுரை அலகு-2 அமைந்துள்ளது. ஓட்டல் தமிழ்நாடு மதுரை அலகு-2ற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கோடும் நவீன வசதிகளுடன் கூடிய நிகழ்விடங்கள், உணவறைகள், சமையலறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டடம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நட்சத்திர விடுதியாக செயல்பட்டு வருகிறது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ப பல்வேறு வசதிகளை மேம்பாடு செய்து புதுப்பொலிவுடன் சிறப்புற மட்டுமின்றி திருமணம், வர்த்தக கருத்தரங்கு, சமூக நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் நடைபெறும் வகையில் சிறந்த வர்த்தக நட்சத்திர விடுதியாக செயல்பட்டு வருகிறது.
மதுரையில் செயல்படும் ஓட்டல் தமிழ்நாடு
மதுரையில் அழகர் கோயில் சாலையிலும், பெரியார் பஸ் நிலையம் அருகேயும் 'ஓட்டல் தமிழ்நாடு' என்ற பெயரில் ஓட்டல்கள் செயல்படுகின்றன. குறைவான வாடகையில் காலை இலவச உணவு வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி உள்ள அறைகளும், குளிர்சாதன வசதி அல்லாத அறைகள், விசாலமான கார் நிறுத்தம், கருத்தரங்குக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மதுபானக்கூடம், குழந்தைகள் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் அதிநவீன மின் உலர் சலவையகம் ஆகிய வசதிகள் உள்ளன.
குறைந்த வாடகையில் சொகுசு அரங்கம்
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள ஓட்டலில் குளிர்சாதன வசதி உள்ள அறைகளும், குளிர்சாதன வசதி அல்லாத அறைகளும், "இயல்", "இசை", என்னும் கூடங்களும், மேலும் 400 நபர்கள் அமரக்கூடிய "நாடகம்" என்னும் திருமண அரங்கு மற்றும் "முத்தமிழ்" என்னும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கூட்ட அரங்கமும் பிரமாண்டமான முறையில் சிறப்புற அமையப் பெற்றுள்ளது. “நாட்டியம்" என்னும் திறந்தவெளி அரங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சமூக நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு பொருட்காட்சி ஆகியவற்றிற்கு குறைந்த வாடகைக்கு அளிக்கப்படுகிறது.
பல்வேறு பகுதியைச் சேர்ந்த உணவு வகைகள்
மேலும் “அமுதகம்” எனப்படும் குளிரூட்டப்பட்ட பல்சுவை உணவகம் தங்கும் விருந்தினர் மற்றும் பிற விருந்தினர்களுக்காக காலை 06.00 மணி முதல் இரவு 09.30 மணிவரை செயல்படுகிறது. இவ் உணவகத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய தென்னிந்திய, வடஇந்திய மற்றும் சைனீஸ், தந்தூரி உணவு வகைகள் சரியான விலையில் செயற்கை நிறமூட்டிகளோ, சுவையூட்டிகளோ சேர்க்கப்படாமல் தரமானதாக தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
மீனாட்சியம்மன் கோயில் முதல் கீழடிவரை
”தற்போது நவீன வசதிகளுடன் கூடிய நிகழ்விடங்கள், உணவறைகள், சமையலறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை மாநகர மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக அமையும். மதுரையை பார்வையிடவரும் மக்கள் மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், திருமலைநாயக்கர் மஹால், கீழடி அருங்காட்சியகம், காந்திமியூசியம், கீழக்குயில் குடி, அரிட்டாபட்டி, தெப்பக்குளம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என முக்கியமான இடங்களை பார்வையிட வருகின்றனர். அவர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சேவையை தற்போது திறந்து வைத்த கட்டடத்தின் மூலம் வழங்கமுடியும்” - என மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.ஸ்ரீபாலமுருகன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















