திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
இண்டியா கூட்டணிக் கூட்டத்தை திமுக புறக்கணிக்கக் கூடாது. முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பழனியில் பேட்டி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வி. நாராயணசாமி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணிக் கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது கவலைக்குரியது என்றார். மாநில அளவிலான கூட்டணிகளும், அகில இந்திய அளவிலான கூட்டணிகளும் வேறுபட்டவை என்பதை திமுக உணர வேண்டும் என்றும், மதவாத மற்றும் மக்கள் விரோத மோடி அரசை எதிர்கொள்ள இண்டியா கூட்டணி பலமாக இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
திமுக தனித்து நின்று போராடினால் வெற்றி பெற முடியாது. இண்டியா கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டால் தான் தேசிய அளவில் வலிமையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஊடகங்களின் கணிப்புகளை மீறி மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகியுள்ளதாக கூறினார். அரசியல் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு பாடமாக அமைந்துள்ளதாகவும், மக்கள் விருப்பமே இறுதியில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி தேர்தல் தோல்வி குறித்து பேசிய நாராயணசாமி, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி மற்றும் திமுக மாநில நிர்வாகிகளின் அணுகுமுறையே தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து தமிழகத்தில் புதியதாக அமைந்துள்ள தவெக ஆட்சி குறித்து பேசிய அவர், முதல்வர் விஜய் தனது முதல் உரையிலேயே ஊழலற்ற நிர்வாகம் வழங்குவதாக உறுதியளித்திருப்பதால், அவரது ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை புதிய அரசு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















