பழனி முருகன் கோவில் கூட்ட நெரிசலால் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.. இலவச பேட்டரி கார் சேவை ஆரம்பம்!
டிவிஎஸ் நிறுவனம் சார்பில் 23 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட புதிய பேட்டரி வாகனம் புதுச்சேரியைச் சேர்ந்த முருக பக்தர்கள் வேல்முருகன் மற்றும் குகன் ஆகியோரால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளி ஆண்டு தேர்வு விடுமுறை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் திரளாகக் கூடினர். இதனால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து, மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. சாதாரண மற்றும் கட்டண தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் மலைக்கோவிலில் சாமி தரிசனம் பெற 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு செல்லவும், படிப்பாதை வழியாக கீழிறங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பகுதியில் பக்தர்கள் வசதியை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த முருகன் பக்தர்கள் பேட்டரி வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த புதிய வாகனம் கிரிவலப் பாதையில் இலவச சேவையாக இயக்கப்படத் தொடங்கியுள்ளது.
பழனி முருகன் கோவிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு கார்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம், பாத விநாயகர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா பேட்டரி வாகன சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் குறிப்பாக மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பயன் அடைந்து வருகின்றனர்.
அவர்கள் எளிதாகவும் சிரமமின்றியும் கிரிவலப் பாதையை சுற்றி தரிசனம் செய்ய இந்த வாகனங்கள் உதவி செய்கின்றன. இந்நிலையில், டிவிஎஸ் நிறுவனம் சார்பில் 23 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட புதிய பேட்டரி வாகனம் புதுச்சேரியைச் சேர்ந்த முருக பக்தர்கள் வேல்முருகன் மற்றும் குகன் ஆகியோரால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த வாகனம் பாத விநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்து பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த புதிய சேர்க்கையுடன், மலையடிவார கிரிவலப் பாதையில் தற்போது மொத்தம் 38 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட உள்ளது. கோவில் நிர்வாகத்தின் இந்த முயற்சி பக்தர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















