Chithirai Festival: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்.. பக்தி பரவசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்..
சித்திரை திருவிழா முடித்து கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லாக்கில் எழுந்தருளி அழகர் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
![Chithirai Festival: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்.. பக்தி பரவசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்.. chithirai thiruvizha comes to an end with azhagar returning to temple madurai Chithirai Festival: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்.. பக்தி பரவசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/459708b178a287070cea90182b4486f11683514760765589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சித்திரை திருவிழா முடித்து கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லாக்கில் எழுந்தருளி அழகர் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் திருவிழா உலக புகழ்பெற்றது ஆகும். மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் முக்கிய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர். தேரோட்டத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா நிறைவு பெற்றது. மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவை தொடர்ந்து அழகர் கோயில் திருவைழா தொடங்கியது.
சித்திரை திருவிழாவுக்காக மே 3 ஆம் தேதி அழகர் கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். மே 4 ஆம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மே 5 ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை, தொடர்ந்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 6 ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 7 ஆம் தேதி திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவதானியம், வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை கொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், ரோஸ், துளசி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் முன் எழுந்தருளினார். கருப்பண்ணசாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர், அழகர் மலையினை நோக்கி புறப்பட்டார். இலட்சக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். மே 9 இரவு கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு சென்றடைவார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)