Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அவையில் சந்தித்த முதல் பெரும் பின்னடைவு இதுவாகும். இதற்கு முன் எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் போனதில்லை

நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா (அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதா, 2026) மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் தோல்வியடைந்தது.
வாக்கெடுப்பில் நடந்தது என்ன?
நாடாளுமன்றத்தில் பதிவான மொத்தம் 528 வாக்குகளில், 298 வாக்குகள் ஆதரவாகவும், 230 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. பெரும்பான்மை இருந்தபோதிலும், அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேவையான எண்ணிக்கையை விட 54 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் இந்த மசோதா தோல்வியைத் தழுவியது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. நீங்கள் ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டீர்கள். பெண்களைக் கௌரவிக்கும் எங்களது போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.
மோடி அரசுக்கு முதல் பின்னடைவு!
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அவையில் சந்தித்த முதல் பெரும் பின்னடைவு இதுவாகும். இதற்கு முன் எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் போனதில்லை. இது வெறும் அரசியல் நெருக்கடியால் அல்ல, இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கட்டாய விதிமுறைகளால் நிகழ்ந்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது.2029-ஆம் ஆண்டிற்குள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்துவது.இருப்பினும், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மசோதா ஏன் நிறைவேறவில்லை?
அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அதற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
-
சிறப்பு பெரும்பான்மை: அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும்.
-
வாக்களிப்போர் எண்ணிக்கை: அவையில் சமூகளித்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 2/3 பங்கு ஆதரவு தேவை.
-
மாநிலங்களின் ஒப்புதல்: இது தவிர, பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும்.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், 298 வாக்குகள் பெற்றும் மசோதா முறியடிக்கப்பட்டது.
பிரியங்கா காந்தி காட்டம்:
மசோதா தோல்வியடைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அவர் கூறியதாவது:"காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரானது அல்ல. ஆனால், அரசு இந்த மசோதாவை அமல்படுத்த முயன்ற விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதும், இதில் OBC பிரிவினரைச் சேர்க்காததும் மிகப்பெரிய தவறு. இதனால்தான் காங்கிரஸ் இதனை ஆதரிக்கவில்லை."
மேலும், இந்த தோல்வி ஜனநாயகத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் கிடைத்த "பெரிய வெற்றி" என்று குறிப்பிட்ட அவர், இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை ஆன்மாவிற்கு எதிரானது என்றும், இது பெண்களுக்கானது மட்டுமல்ல, அரசியல் கட்டமைப்பையே மாற்றும் முயற்சி என்றும் குற்றம் சாட்டினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















