சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. போலீஸ் தயங்குறாங்க - மேற்கு வங்க ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் அந்த மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கடந்தாண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை:
இந்த சூழலில், கடந்த 10ம் தேதி மேற்கு வங்கத்தின் துர்காபூரில் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செயயப்பட்டார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:
இந்த நிலையில், அந்த மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மிகுந்த அதிருப்தியை இந்த விவகாரத்தில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாலியல் குற்றங்களைப் பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது. இந்த சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது.
சமரசம் கூடாது:
மேற்கு வங்கத்தில் எந்த நேரத்திலும், எந்த நாளிலும் பெண்கள் சுதந்திரமாக வெளியே நடமாடக்கூடிய வகையில் மாநிலத்தை மாற்றி அமைக்க வேண்டும்.துர்காபூர் சம்பவத்தில் மம்தா பானர்ஜியின் கருத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. 5 ஆண்டுக்கு ஒரு முறை மாநிலத்தில் அரசு மாறும். ஆனால், சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்யவே கூடாது.
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதே காவல்துறையின் முதன்மையான கடமை. ஆனால், மேற்கு வங்க காவல்துறையில் ஒரு தரப்பினர் ஊழல்வாதிகளாகவும், அரசியல் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும் உள்ளனர். இந்த அதிகாரிகளை அகற்ற வேண்டும். இது ஆளும் அரசின் பொறுப்பு. காவல்துறையினர் ஆளுங்கட்சியின் குரலாக இருக்கக்கூடாது. நடுநிலையுடன் இருக்க வேண்டும்.
அச்சுறுத்தல்:
இந்த நாட்டில் அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது. இதை நம் அரசியலமைப்பு உறுதி செய்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் குற்றங்களால் இந்த உரிமை பாதுகாக்கப்படவில்லை. இது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு மட்டுமின்றி அரசியலமைப்பிற்கே அச்சுறுத்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்தாண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் திரிணாமுல் அரசுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.





















