சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!
சபரிமலையில் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும் - தேவசம் போர்டு அறிவிப்பு
சபரிமலை மகர ஜோதி வழிபாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் நேற்று பெரும் நெரிசல் ஏற்பட்டது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். 8 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதுவரை சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் நேற்று இருந்தது. எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை, பம்பை, கணபதி கோயில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. குறிப்பாக சன்னிதானத்தில் இருந்து மரக்கூட்டம் வரை ஒதுங்கக்கூட இடம் இல்லாத நிலையில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் பம்பை பாலத்தின் தொடக்கத்தில் இருந்து திருவேணி சங்கமம், கணபதி கோயில் வாயில் வரை நெரிசல் ஏற்பட்டது.
இருமுடியுடன் 8 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சன்னிதானத்தை அடையும் நிலையே நேற்று இருந்தது. இதனால் குடிநீர், கழிப்பிடம், உணவுக்கு பக்தர்கள் சிரமப்பட்டனர். இலவச குடிநீர் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பரிதவித்தனர். அளவுக்கு மீறிய கூட்டத்தைகட்டுப்படுத்துவது காவல்துறை,சிறப்பு அதிரடிப்படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஸ்பாட் புக்கிங்கை குறைத்து கூட்டத்தை முறைப்படுத்தி அனுப்பினால்தான் ஐயப்பனை சிரமமின்றி தரிசிக்க முடியும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி சாதாரண பக்தா்கள் தாங்களே எழுதி, இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்களையும் ஒலிபரப்ப திருவிதாங்கூா் தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இதுவரை சபரிமலை சன்னிதானத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜெயவிஜயா போன்ற புகழ்பெற்ற பாடகா்கள் பாடிய பாடல்கள் மட்டுமே ஒலிபெருக்கி வழியாக இசைக்கப்பட்டு வருகின்றன.
அதிகாலையில் நடை திறக்கும்போது யேசுதாஸின் ‘வந்தே விக்னேஸ்வரம்’ மற்றும் இரவு நடை அடைக்கும்போது ‘ஹரிவராசனம்’ பாடல்களும், பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கும்போது ஜெயவிஜயாவின் ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடலும் இசைக்கப்படுகிறது. பக்தா்களின் ஆன்மிக பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவா்கள் உருவாக்கிய புதிய பாடல்களையும் இனி ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்க தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும்.
பாடல்களை சன்னிதானத்தில் உள்ள தேவசம் அதிகாரியிடம் பக்தா்கள் நேரடியாக வழங்கலாம். பக்தா்கள் சமர்ப்பிக்கும் பாடல்கள் சொந்தமாக இயற்றப்பட்டதாகவும், இசையமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பாடலாசிரியா், இசையமைப்பாளா், பாடகா் ஆகிய மூவரும் இணைந்து, சமா்ப்பிக்கப்படும் பாடலானது தங்களின் சொந்த முயற்சி என்றும், இதற்கு வேறு எவரும் காப்புரிமை கோர முடியாது என்றும் உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். பக்தா்கள் சமா்ப்பிக்கும் அனைத்துப் பாடல்களும் தரம் மற்றும் ஆன்மிக கருத்துகளின் அடிப்படையில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். தகுதியான பாடல்கள் தோ்வு செய்யப்பட்டு, சபரிமலையின் அதிகாரபூா்வ ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















