SC Warns ECI: “பீகார் SIR-ல் முறைகேடு நடந்திருந்தால்..“ - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற எச்சரிக்கை என்ன.?
பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது என்ன என பார்ப்போம்.

பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தவறு ஏதும் நடந்திருந்தால், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் முழுமையாக ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை என்ன.?
பீகாரில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், அதாவது, பீகார் SIR நடைமுறையில் ஏதாவது முறைகேடு கண்டறியப்பட்டால், ஒட்டு மொத்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தையும் ரத்து செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.
அரசியல் அமைப்பின்படி செயல்பட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதால், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சட்டம் மற்றும் விதிமுறைகளை மதித்து தேர்தல் ஆணையம் நடக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல், நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அமலாகும் வகையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மேலும், வரும் 7-ம் இறுதி வாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், செப்டம்பர் 8-ம் தேதி ஆதார் கார்டையும் செல்லுபடியாகும் 12-வது ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் நடந்தது என்ன.?
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த ஜூன் மாத இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, பீகார் முழுவதும் வீடு வீடாகச் சென்ற தேர்தல் ஆணைய ஊழியர்கள், வாக்காளர்களின் அடையாளங்களை சரி பார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 7 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் பெயர்கள் வேறு பட்டியலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில்தான், இன்றைய வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





















