Electoral Bonds case: தேர்தல் பத்திரம் வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
![Electoral Bonds case: தேர்தல் பத்திரம் வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி! Supreme Court Dismisses SBI Plea For Extension Of Time For Furnishing Electoral Bonds Details Directs Disclosure By March 12 Electoral Bonds case: தேர்தல் பத்திரம் வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/ee340bd47f57f95c88423ae44b1ef0751710138855629729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் விவரங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் அதிரடி:
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
கூடுதல் அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வங்கியிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றன எனக் கூறி, நாளைக்குள் விவரங்களை சமர்பிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
இன்றைய விசாரணையின்போது, எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நன்கொடு வழங்கியவர்களின் விவரங்களையும் அதை பெற்றவர்களின் விவரங்களையும் சமர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தார். இரண்டு தகவல்களும் தனித்தனியே சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கூடுதல் அவகாசம் கோரினார்.
இந்த வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி, "நன்கொடை கொடுத்தவரின் விவரங்களும் நன்கொடை பெற்றவர்களின் விவரங்களும் தனித்தனியே சேகரிக்கப்பட்டு வைத்திருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். யார், யாருக்கு கொடுத்தார்கள் என்ற தகவலை வெளியிட குறிப்பிடுத்தகுந்த நேரம் வேண்டும் என சொல்கிறீர்கள்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை பார்த்தால், யார் கொடுத்த நன்கொடை எந்த அரசியல் கட்சிக்கு சென்றது என்பதை கேட்கவில்லை. வெறும் நன்கொடை விவரங்களை வெளியிடும்படியே நீதிமன்றம் தெரிவித்தது. வங்கியின் KYC பதிவுகளில் தேவையான அனைத்து விவரங்களும் உள்ளன.
இந்த விவகாரத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று மார்ச் 11ஆம் தேதி. கடந்த 26 நாட்களில் நீங்கள் எந்த அளவுக்கு தகவல்களை சேகரித்திருக்கீறிர்கள்? இது குறித்து நீங்கள் மனுவில் குறிப்பிடவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
அதேபோல, எஸ்.பி.ஐ வங்கிக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)