சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் 4 மணி நேரம் விசாரணை! நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இனியும் கைதாக வேண்டியவர்கள் யாராவது இருந்தாலும்,அவர்களையும் கைது செய்யட்டும். இதுபோன்ற செயலில் சிக்கும் யாரையும் ஐயப்பன் சும்மா விடமாட்டார் - நடிகர் ஜெயராம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு சென்னைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டபோது. அதில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, சிறப்பு விசாரணை குழு விசாரிக்க கேரள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாக முன்னாள் அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை அடுத்தடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.
இதற்கிடையே மலையாள பிரபல நடிகர் ஜெயராம் வீட்டில், உன்னிகிருஷ்ணன் போற்றி சபரிமலை கவசங்களை வைத்து பூஜை செய்ததாக புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவருக்கும், நடிகருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. சபரிமலை தங்கத் திருட்டு வழக்கின் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த, தங்க திருட்டு வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் நடிகர் ஜெயராம் எத்தனை முறை பூஜைகளில் கலந்து கொண்டார்.
இவர்களுக்கு இடையே எந்தவிதமான நிதி பரிவர்த்தனைகள் நடந்தது என்பதைக் குறித்து கடந்த மாதம் சென்னை உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் SIT அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதன்படி, நேற்று காலை 11.30 மணியளவில் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறையினர் மாலை 3.30 மணி வரை என 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.அதன் பின்னர் நடிகர் ஜெயராம் கூறும்போது, அமலாக்கத்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்களை அளித்துள்ளேன். மீண்டும் ஆஜராகுமாறு தெரிவிக்கவில்லை என்றார்.
முன்னதாக விசாரணைக்கு ஆஜராகும் முன் நடிகர் ஜெயராம் நிருபர்களிடம் கூறியதாவது, "சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இனியும் கைதாக வேண்டியவர்கள் யாராவது இருந்தால், அவர்களையும் கைது செய்யட்டும். இதுபோன்ற செயலில் சிக்கும் யாரையும் ஐயப்பன் சும்மா விடமாட்டார், தப்ப விடமாட்டார். கடந்த 38 ஆண்டுகளாக கேரளாவில் பல்வேறு கோவில்களில் பூஜைகள், யானையை நன்கொடையாக தருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை விழா ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். அது போல கருதி, என்னை இந்த பூஜைக்கு அழைத்ததால் தான் கலந்துகொண்டேன். ஏதாவது முறைகேடு நடந்ததா என தெரியாது." இவ்வாறு அவர் கூறினார்.






















