![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rishabh Pant: ரிஷப் பண்ட்டுக்கு விபூதியா? 1.63 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர்.. என்ன நடந்தது தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் இடம் ஒருவர் 1.63 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
![Rishabh Pant: ரிஷப் பண்ட்டுக்கு விபூதியா? 1.63 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர்.. என்ன நடந்தது தெரியுமா? Rishabh Pant Cheated of Rs 1.63 crore by former Haryana cricketer Mrinank Singh Check Details Rishabh Pant: ரிஷப் பண்ட்டுக்கு விபூதியா? 1.63 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர்.. என்ன நடந்தது தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/23/140a242467e9c6d74e86174de9bc27bd_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவருக்கு எப்போதும் வாட்ச் உள்ளிட்ட சில ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதை பயன்படுத்தி ஒருவர் அவரிடமிருந்து சுமார் 1.63 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளர் ஆகிய இருவரும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி ரிஷப் பண்ட் இடம் மிர்னக் சிங் என்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை ஒரு ஆடம்பர பொருட்கள் வாங்கி தரும் நபராக அறிமுகம் செய்துள்ளார். மேலும் அவர் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ச் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கி தந்துள்ளதாக கூறியுள்ளார். இதை நம்பி ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளார் இந்த நபரிடம் வாட்ச் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கி தருமாறு கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் மிர்னக் சிங்கிடம் சுமார் 65 லட்சம் மதிப்பாலான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் ஆகியவற்றை வழங்கி விற்று தருமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த பொருட்களை வாங்கி விட்டு அவர் ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக ரிஷப் பண்ட் இடமிருந்து சுமார் 1.63 கோடி ரூபாய் அளவிற்கு அவர் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே மிர்னக் சிங் மும்பையில் ஒரு தொழிலதிபரிடம் ஏமாற்றியுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. அந்த தொழிலதிபருக்கு ஆடம்பர பொருட்களை வாங்கி தருவதாக கூறி இவர் 6 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த நபர் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்டல்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 5 இடம் பிடித்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. ரிஷப் பண்ட் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)