பிரதமர் மோடி பளீர்..உலகம் ஒரே குடும்பம்..என்ற தத்துவத்தில் இந்தியா வேரூன்றியுள்ளது
2040-ம் ஆண்டுக்குள், ஒரு இந்திய விண்வெளி வீரர் சந்திரனில் கால்தடங்களைப் பதிப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார். அப்போது இந்திய விண்வெளி துறையில் செய்த சாதனைகளையும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாவது, “ 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை, இந்தியா பல விண்வெளி சாதனைகளை புரிந்துள்ளது.
2014-ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்தியாவின் வரலாற்று சாதனையை படைத்தது. சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது. சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கியது என்றும் சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா சாதனை நடவடிக்கையாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கியது எனவும் ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என்றும், இந்திய ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி 34 நாடுகளுக்கு 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியது என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய படியாகும் என்றும் இது இந்தியாவின் சமீபத்திய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் விண்வெளிப் பயணம் மற்றவர்களுடன் போட்டியிடுவது பற்றியது அல்ல எனவும், மாறாக இணைந்து வளர்ச்சி அடைவது பற்றியது. இந்தியாவின் தலைமைத்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி20 செயற்கைக்கோள் இயக்கம், உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும்.
2035-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் விண்வெளி நிலையம் புதிய ஆராய்ச்சியையும், சர்வதேச ஒத்துழைப்பையும் எளிதாக்கும். 2040-ம் ஆண்டுக்குள், ஒரு இந்திய விண்வெளி வீரர் சந்திரனில் கால்தடங்களைப் பதிப்பார். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகியவை இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களில் முக்கிய இலக்குகளாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, விண்வெளி என்பது ஆய்வு மட்டுமல்ல எனவும், அதிகாரமளிப்பதும் ஆகும். விண்வெளி தொழில்நுட்பம் எவ்வாறு நிர்வாகத்தை மேம்படுத்துகிறது என்பதையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தலைமுறைகளை ஊக்குவிக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார். மீனவர்களுக்கான எச்சரிக்கைகள், ரயில்வே பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றில் அவற்றின் பங்களிப்பை மேற்கோள் காட்டி, ஒவ்வொரு இந்தியரின் நலனையும் உறுதி செய்வதில் செயற்கைக்கோள்களின் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்தியாவின் விண்வெளிப் பார்வை, உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் பண்டைய தத்துவத்தில் வேரூன்றியுள்ளது . இந்தியாவின் விண்வெளிப் பயணம் அதன் சொந்த வளர்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல எனவும், உலகளாவிய அறிவை வளப்படுத்துவது, சவால்களை எதிர்கொள்வது, எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பது ஆகியவை பற்றியது என்றும் கூறினார். அறிவியல் மூலமாகவும் சிறந்த எதிர்காலத்திற்கான விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.





















