![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Odisha Flights: ஒடிசா ரயில் விபத்து எதிரொலி... விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
புவனேஸ்வருக்கு செல்லும் விமானங்களுக்கும் அங்கிருந்து புறப்படும் விமானங்களுக்குமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், அதைக் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
![Odisha Flights: ஒடிசா ரயில் விபத்து எதிரொலி... விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! Odisha train accident Monitor Rise In Airfares Ministry To Airlines After Odisha Train Crash Odisha Flights: ஒடிசா ரயில் விபத்து எதிரொலி... விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/03/c3bc165ca8e318bb4e319a51400e9c461685808494395729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒடிசாவில் நடந்துள்ள ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதை கருத்தில் கொண்டுள்ள விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) விமான நிறுவனங்களுக்கு அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு:
புவனேஸ்வருக்கு செல்லும் விமானங்களுக்கும் அங்கிருந்து புறப்படும் விமானங்களுக்குமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், அதைக் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. இதை தவிர, ரயில் விபத்து காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோசமான ரயில் விபத்து:
அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிஷாவில் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)