குழந்தைக்கு கொடுக்கிற பாலில் கலப்படமா? இனி இருக்காது!
கிராம அளவில் பால் சேகரிப்பில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவு மற்றும் பால் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தானியங்கி பால் சேகரிப்பு அலகுகள் மற்றும் பால் சேகரிப்பு தரவு விவர அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு தேசிய பால் வளர்ச்சித் திட்டம் நிதியுதவி அளிக்கிறது.

பால் கலப்படம் குறித்து தொடர் புகார்கள் வரும் நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
பால் கலப்படம் குறித்து தொடர் புகார்கள்:
அதில், "உணவு தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை நிறுவவும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ஐ மத்திய அரசு இயற்றியது. உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரத்தை உணவுப் பாதுகாப்பு ஆணையம் நிர்ணயிக்கிறது.
அத்துடன் மனித நுகர்வுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. உணவு மாதிரிகளை பரிசோதிக்க நடமாடும் உணவு ஆய்வுக் கூடங்கள் செயல்படுகின்றன. நாடு முழுவதும் தற்போது 285 நடமாடும் உணவு ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தேசிய பால் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தரமான பால் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் முதன்மை குளிரூட்டும் வசதிகளுக்கான உள்கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
மத்திய அரசு விளக்கம்:
கிராம அளவில் பால் சேகரிப்பில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவு மற்றும் பால் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தானியங்கி பால் சேகரிப்பு அலகுகள் மற்றும் பால் சேகரிப்பு தரவு விவர அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு தேசிய பால் வளர்ச்சித் திட்டம் நிதியுதவி அளிக்கிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) விதிமுறைகள்-2011-ன் கீழ் பால் மற்றும் பால் பொருட்களுக்கான தர நிலைகளை நிறுவியுள்ளது.
இந்தத் தரநிலைகள் நாடு முழுவதும் உள்ள பால் கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட அனைத்து உணவு வணிக நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். புதிய தரநிலைகளை உருவாக்கும் போது அல்லது ஏற்கனவே உள்ளவற்றை திருத்தும் போது, உணவு பாதுகாப்பு ஆணையம் பொது மக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்து மற்றும் பரிந்துரைகளை கோருவதற்கு வரைவு அறிவிப்புகளை வெளியிடுகிறது.
பால் கூட்டுறவுகளிடமிருந்து உள்ளீடு உட்பட பெறப்பட்ட பின்னூட்டங்கள், தரத்தை நிர்ணயிக்கும் செயல்பாட்டின் போது முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.





















