Uttarkashi Tunnel Collapse: தொடரும் சவால்கள்! துளையிடும் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு - 41 தொழிலாளர்களை மீட்பதில் என்ன சிக்கல்?
உத்தரகண்ட் சுரங்க விபத்து மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதை அடுத்து, நாளை மீட்புப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uttarkhand Tunnel Collapse: உத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதை அடுத்து, நாளை மீட்புப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் தொய்வு:
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 14 வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என்று நினைத்தனர்.
ஆனால், மீட்புப் பணியில் ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியது. இதனால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டன. முதலில், ஆகர் இயந்திரத்தை கொண்டு வந்து துளையிட்டு கொண்டிருந்தனர்.
இதில், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கீரிட் தளம் சேதமடைந்தது. முன்னதாக, ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு கம்பி குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் ஆனது. சுரங்கப்பாதையில் அதிகளவு இரும்பு கம்பிகள் உள்ளதால், துளையிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன சிக்கல்?
இந்நிலையில், இன்று இரும்பு கம்பிகளை ஆகர் இயந்திரம் மூலம் வெட்டிக் கொண்டிருந்தபோது, ஆகர் இயந்திரம் பழுதடைந்தது. இதன் காரணமாக, கைகளால் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்த துளையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நாளை மீட்புப்பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க இடிபாடுகளில் அதிகளவிலான இரும்பு கம்பிகள் உள்ளன. இதனால், துளையிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சுரங்க இடிபாடுகளில் இரும்பு கம்பிகளை அகற்றினால் மட்டுமே துளையிட முடியும். இரும்பு கம்பிகளை அகற்றும் இயந்திரம் இருந்தால் மட்டுமே மீட்புப் பணிகள் தொடர முடியும். அதேவேளை, மாற்றுத்திட்டமாக, சுரங்கப்பாதையின் மேல் இருந்து குடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
நடந்தது என்ன?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.
அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர். சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால, விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க ரம்மி, லூடோ, செஸ் ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்பட்டன. இதோடு இல்லாமல், மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















