காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
இந்தியாவின் காண்டம் உற்பத்தித் துறை சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் மூலப்பொருட்கள் அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, தற்போது காண்டம் உற்பத்தித் துறையிலும் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது
போர்ச் சூழலும் இறக்குமதி முடக்கமும்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணை முடக்கம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்திருந்த போதிலும், உள்நாட்டில் எரிபொருள் தேவை இன்னும் சீரடையவில்லை. இந்த இக்கட்டான நிலையில், வளைகுடா நாடுகளைச் சார்ந்திருக்கும் வேதிப்பொருள்களின் இறக்குமதியும் தற்போது முடங்கியுள்ளது.
மூலப்பொருள்கள் தட்டுப்பாடும் விலை உயர்வும்
இந்தியாவின் காண்டம் உற்பத்தித் துறை சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் அம்மோனியா, 80 முதல் 85 சதவீதம் வரை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போதைய போர் பதற்றத்தால் இந்த ரசாயனப் பொருள்களின் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் அம்மோனியாவின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, உற்பத்திக்கான மற்றொரு முக்கிய தேவையான சிலிக்கான் எண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
உற்பத்தி நிறுவனங்களின் நெருக்கடி
மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. உற்பத்தி செலவு அதிகரிப்பதால் காண்டம்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்தத் தட்டுப்பாடு நீடித்தால் சந்தையில் காண்டம் கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும் எனத் தெரிகிறது.
தீவிரமடையும் சுகாதார அச்சுறுத்தல்கள்
காண்டம் தட்டுப்பாட்டை வெறும் வணிகப் பிரச்சனையாக மட்டும் கடந்து செல்ல முடியாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில், தேவையற்ற கருத்தரிப்பைத் தடுக்கவும், எச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கவும் காண்டம் முதன்மையான சாதனமாக விளங்குகிறது. இதன் விலை அதிகரித்தாலோ அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டாலோ, திட்டமிடப்படாத கர்ப்பங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளின் விகிதம் அதிகரிக்கக்கூடும்.
அரசின் தலையீட்டுக்கான அவசியம்
சுகாதாரத் துறையில் ஏற்படப்போகும் இந்த பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. காண்டம் உற்பத்திக்கான மாற்று வழிகளை ஆராய்வதும், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதும் தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
























