இனி ரயிலில் பயணம் ஒரு சொகுசு அனுபவம் தான்! இந்திய ரயில்வேயின் அதிரடி மாற்றங்கள் என்ன?
Indian Railways: ரயில்வேயின் இந்த புதிய திட்டத்தில் பெரும்பாலும் ஏழாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட WAP-7 இன்ஜின்கள் மற்றும் புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வகை இன்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளன.

ரயில்வே அமைச்சகத்தின் புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2026-27 நிதியாண்டில் சுமார் 492 பயணிகள் ரயில் இன்ஜின்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்திய ரயில்வேயை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இதன் விவரங்களை காண்போம்
2026-ன் இலக்கும் புதிய தயாரிப்புத் திட்டமும்
இந்திய ரயில்வே தனது பயணத்தை வேகமாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ரயில்வே அமைச்சகத்தின் புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2026-27 நிதியாண்டில் சுமார் 492 பயணிகள் ரயில் இன்ஜின்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் ஏழாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட WAP-7 இன்ஜின்கள் மற்றும் புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வகை இன்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளன.
ஆரம்பகால நீராவி இன்ஜின்கள்
1853-ம் ஆண்டு இந்தியாவில் ரயில் சேவை முதன்முதலில் தொடங்கியபோது, சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் போன்ற நீராவி இன்ஜின்களே பயன்படுத்தப்பட்டன. நிலக்கரி மற்றும் நீரால் இயங்கிய இந்த இன்ஜின்கள் அதிக புகையை வெளியிட்டன. மிகவும் மெதுவான வேகத்தில் சென்ற இந்த ரயில்களில் பயணம் செய்வது அதிக இரைச்சலாகவும், சொகுசு வசதிகள் இன்றியும் இருந்தது.
ஏழாம் தலைமுறை இன்ஜின்களின் அசுர வேகம்
இன்றைய நவீன லோகோமோட்டிவ்கள் (இன்ஜின்கள்) அன்றைய கால இயந்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. தற்போது புழக்கத்தில் உள்ள WAP-7 போன்ற இன்ஜின்கள் 6,000 குதிரைத்திறனுக்கு (Horsepower) மேல் சக்தி கொண்டவை. இவை முழுவதும் மின்சாரத்தால் இயங்குவதுடன், மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டவை.
மரப்பெட்டிகள் முதல் எஃகு பெட்டிகள் வரை
ஆரம்பத்தில் ரயில் பெட்டிகள் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. கதவுகள் வெளிப்பக்கமாகத் திறக்கும் நிலையில் இருந்தன. 1905-ம் ஆண்டுக்கு முன்பு வரை மின்விசிறிகள் கூட ரயில்களில் கிடையாது. ஆனால், இன்றைய எல்.எச்.பி (LHB) மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள் துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை விபத்து காலங்களில் ஒன்றின் மேல் ஒன்று ஏறாத வகையில் (Anti-climbing) வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐஸ் கட்டிகள் டூ ஏர் கண்டிஷனிங்: நவீன வசதிகள்
முற்காலத்தில் ரயில்களைக் குளிர்விக்கப் பனிக்கட்டிகள் (Ice cubes) பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அதிநவீன ஏர் கண்டிஷனிங், பயோ-வேக்யூம் கழிப்பறைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக 'கவாச்' (Kavach) போன்ற தானியங்கி விபத்துத் தடுப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹைட்ரஜன் மற்றும் ஏரோடைனமிக் டிசைன்
இந்திய ரயில்வேயின் அடுத்தகட்ட பாய்ச்சலாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்கள் அமைய உள்ளன. மேலும், காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஏரோடைனமிக் வடிவம் கொண்ட WAP-7D போன்ற இன்ஜின்களும் சோதனையில் உள்ளன. இவை எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வேகமான பயணத்தை உறுதி செய்யும்.
























