Watch Video | ரோட்டுலயும் தண்ணீர்.. காட்டுலயும் தண்ணீர்.. வெள்ளத்தில் மிதக்கும் திருப்பதி!
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி, நெல்லூர் ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

சென்னையைக் கடக்கும் காற்று அழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா பகுதிகளின் கரையோரம் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. கன மழை பெய்து வருவதால், திருப்பதி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமோ, உடைமைச் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
திருப்பதியில் ஏற்பட்ட கன மழை காரணமாகவும், அதனுடன் வந்த சூறாவளிக் காற்றாலும் திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோயில் நகரமான திருப்பதி முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மழையால் பல்வேறு மரங்கள் சாய்ந்துள்ளன. மரங்கள் சாய்ந்திருப்பதால் பல்வேறு பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Massive flooding in #Tirupati. Roads turn into rivers. Multiple landslides reported atop #tirumalahills. The depression that is expected to cross #Chennai tomorrow morning is dumping rain in buckets. Logjam & chaos everywhere. @NewIndianXpress @AndhraPradeshCM pic.twitter.com/DvfBzZTEvN
— S V Krishna Chaitanya (@Krish_TNIE) November 18, 2021
திருப்பதி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. திருப்பதியில் உள்ள பவானி நகர், ஸ்ரீஹரி காலனி, பழைய மகப்பேறு மருத்துவமனை சாலை, கிழக்கு தேவாலயம் சாலை, லட்சுமிபுரம், மதுரா நகர் ஆகிய பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், பழைய மகப்பேறு மருத்துவமனை சாலை, கலிகோபுரம் ஆகிய பகுதிகளில் பெரிய மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் பெருமளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகினர்.
திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருமளவில் கன மழை பெய்துள்ளதால், மலைக்குப் பயணிக்கும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு, திருமலை தேவஸ்தானம் மலைக்குச் செல்லும் சாலையைக் கடந்த நவம்பர் 17 அன்று மூடியுள்ளது. நெல்லூர், சித்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை அதிகளவில் பெய்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

