![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gujarat Election: 89 தொகுதிகள்.. 788 வேட்பாளர்கள்..! இன்னும் சற்று நேரத்தில் குஜராத்தில் வாக்குப்பதிவு..!
89 தொகுதிகளுக்கு உட்பட்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
![Gujarat Election: 89 தொகுதிகள்.. 788 வேட்பாளர்கள்..! இன்னும் சற்று நேரத்தில் குஜராத்தில் வாக்குப்பதிவு..! Gujarat Election: first phase of elections for the 89-constituency Gujarat Legislative Assembly is currently underway Gujarat Election: 89 தொகுதிகள்.. 788 வேட்பாளர்கள்..! இன்னும் சற்று நேரத்தில் குஜராத்தில் வாக்குப்பதிவு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/686bba5d27ccca5beeffccbd8135a0ff1669857523488571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
89 தொகுதிகளுக்கு உட்பட்ட குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் முதற்கட்ட தேர்தலில் 19 மாவட்டங்களிலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வத்துடன் தற்போது முதல் வரத்தொடங்கியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 இடங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அதில், 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். இதனால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி சஸ்பெண்ட் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது.
ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டன. இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் பிரச்சாரம் சற்று மந்தமாகவே இருந்தது.
படேல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாநிலம் முழுவதும் இரண்டு பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். அது, தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கடைசி நாளான நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 2,39,76,760 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)