(Source: Poll of Polls)
Gas Tanker Lorry Strike: சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்; 6 மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிங்களை உள்ளடக்கிய தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 5,500 சமையல் கேஸ் டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் கேஸை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வந்தன.
இந்த பணிகளுக்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு, டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், அதன்பின் போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், 21 டன் கேஸ் ஏற்றும் 3 ஆக்ஸில் டேங்கர் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்த நிலையில், அதனை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் சமையல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டதில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை தளர்த்தின. இதனிடையே, எண்ணெய் நிறுவனங்கள் 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் போட்ட நிலையில், 2,800 லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல்லில் தென் மண்டல கேஸ் டேங்க லாரி உரிமையாளர்கள் சங்க அவசரப் பொதுக்கூட்டம், சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்ததாகவும், 700-க்கும் அதிகமான லாரிசளுக்கு ஒப்பந்தம் வழங்காததால், அந்த லாரிகளின் உரிமையாளர்கள் வேலை இழந்து, வாகனக் கடனை கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், தகுதியாக அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதுவரை தென்னிந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காது என அவர் கூறினார். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்தால், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.





















