![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cauvery Water: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்குமா தண்ணீர்..? இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.
![Cauvery Water: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்குமா தண்ணீர்..? இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் cauvery management commission to meet today on supreme court order can tamilnadu farmers get water Cauvery Water: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்குமா தண்ணீர்..? இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/1b8b003e57404630f80cde23a1d6151e1692711230421102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம்:
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
எதிர்ப்பும், உத்தரவும்:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியிலும் கர்நாடக அதிகாரிகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
இதனிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் கர்நாடக அரசின் போக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது? என்பதையும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இருமாநில அரசுகளின் கோரிக்கை:
அதோடு, தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க அனுமதி கோரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்த மனு மீதும், ஆணையம் உத்தரவிட்ட நீரின் அளவு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.
தீர்வு எட்டப்படுமா?
டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் பிற்பகலில் நடைபெற உள்ளது. இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக அளிக்கப்படும். அதனடிப்படையில் உச்சநீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள இரு வாரங்களுக்கான நீர் பங்கீடு தொடர்பான, ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)