![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Budget 2023: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...!
2023ம் ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
![Budget 2023: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...! Budget session of Parliament begins today President Murmu to address joint sitting of Parliament Budget 2023: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/510079aeac025e7700744e80dc56ce7f1675142521921333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். இதன்படி, நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் முதல் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குவது வழக்கம். நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடக்கும் இந்த கூட்டத்தொடர் தற்போது தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடாளுமன்றத்திற்கு 10.58க்கு வருகை தந்தார். அவருடன் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப்தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். நாட்டின் குடியரசுத் தலைவராக பங்கேற்றுள்ள திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை ஆகும். அதாவது, நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர் பேசுவது இதுவே முதல் முறையாகும்.
ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் இரு அவை உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது என்றார்.
இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது நிதிநிலை அறிக்கை இதுவாகும். மேலும், அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் நிர்மலா சீதாராமன் முழுமையாக தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
பட்ஜெட் தாக்கல்:
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை பட்ஜெட்டுடன் தொடங்கும் கூட்டத்தொடர் வரும் 13-ந் தேதி வரை நடக்கிறது. பின்னர், மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.
எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால், நடப்பு கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. முன்னதாக, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் படிக்க:Sukanya Samriddhi Yojana : உங்கள் செல்ல மகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. என்னென்ன பலன்கள் இருக்கு?
மேலும் படிக்க: LIC: அதானி நிறுவனம் குறித்து கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையுள்ளது - எல்.ஐ.சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)