மூளையைத் தின்னும் அமீபா: மேலும் ஒரு உயிரிழப்பு! அதிர்ச்சியில் கேரள மக்கள்
அமீபா தொற்றால் 3 மாதக் குழந்தை, 9 வயது சிறுமி உள்பட ஒரே மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா (Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல் (primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மூளையைத் தின்னும் அமீபா தொற்று காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து மருந்துகள் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலப்புரத்தில் உள்ள வண்டூரைச் சேர்ந்த 56 வயது பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமையன்று மதியம் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமீபா மூளைக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதீஷ் சனிக்கிழமை காலை உயிரிழந்தார். மலப்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு சென்ற வாரம் வியாழக்கிழமை அமீபா மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
மலப்புரத்தில் உள்ள வந்தூரைச் சேர்ந்த எம். ஷோபனா கடந்த வியாழக்கிழமை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மிகவும் ஆபத்தான நிலையிலும், மயக்க நிலையிலும் இருந்தார். தீவிர மருத்துவச் சிகிச்சையில் இருந்தபோதிலும், தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், தொற்று வேகமாகப் பரவியதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 45 வயது ரிதேஷ் என்பவர் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமீபா தொற்றால் 3 மாதக் குழந்தை, 9 வயது சிறுமி உள்பட ஒரே மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான பாதிப்புகள் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்தாண்டு கேரளம் முழுவதும் 42 பேருக்கு அமீபா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம். சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம். நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரைக் குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது என சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















